சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய கணவன், மனைவியை நடிகர் சூர்யா தனது காரில் ஏற்றிப்போய் மருத்துவமனையில் சேர்த்தார். இப்போது 'எஸ் 3' என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இது 'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகமாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் மதனப் பள்ளியில் நடந்து வருகிறது. இதற்காக சித்தூரில் உள்ள தங்குவிடுதி ஒன்றில் தங்கி இருந்து படப்பிடிப்புக்குச் சென்று வந்தார் சூர்யா. வழக்கம் போல் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மாலையில் விடுதிக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது வழியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத் தில் சிக்கிய கணவன் - மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் உயி ருக்கு போராடியபடி கிடந்தனர். ஏதோ ஒரு வாகனம் அவர்களை இடித்து விட்டு சென்றதால் இந்த விபத்து நேர்ந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இருவரையும் கண்டு பதறிப்போன சூர்யா, உடனே காரை நிறுத்தி ஓடோடிச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டார். தனது உதவியாளர், ஓட்டுநர் உதவியுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன், மனை வியை தூக்கிப்போய் தனது காரில் ஏற்றினார். பின்னர் அவர்களை சித்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு பெண்ணுக்கு பலத்த அடிபட்டு இருப்பதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் சூர்யாவிடம் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை வசதி திருப்பதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தான் இருக்கிறது என்றும் சூர்யாவிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக நகரியில் வசிக்கும் நடிகை ரோஜாவை தொடர்பு கொண்டு பேசிய சூர்யா, திருப்பதி மருத்துவ மனையில் உள்ள குறிப்பிட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடமும் பேசி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். ரோஜாவும் அதே மருத்துவரிடம் பேசி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். பின்னர் சூர்யா தனது சொந்தச் செலவில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஏற்பாடு செய்து கணவன் -மனைவியை திருப்பதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதற்காக அவருக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.