விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாதனா டைட்டஸ். இவர் நல்ல படங்களில் நடிப்பதே தனது லட்சியம் என்று கூறியிருக்கிறார். இப்போது சக்தி இயக்கும் 'எய்தவன்' படத்தில் மட்டும் கலையரசன் ஜோடியாக நடித்து வருகிறார் சாதனா. தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். "தமிழில் எனது முதல் படம் 'பிச்சைக்காரன்'.
இதில் நான் நடித்து வந்தபோது படத்தின் தலைப்பை கேட்டு சிலர் என்னை கேலியாக பார்த்தார்கள். இப்படியா தலைப்பு வைப்பது என்று சிலர் நேரடியாகவும் கேட்டார்கள். ஆனால், இப்போது படம் வெற்றி பெற்ற பிறகு, நான் அந்த படத்தின் நாயகி என்று பெருமையாக சொல்கிறார்கள். அந்த அளவுக்கு 'பிச்சைக்காரன்' படம் எனக்கு புகழைப் பெற்றுத் தந்திருக்கிறது. "அந்த படத்தில் நடித்த போது எனக்கு நாயகனும் இயக்குநரும் முழு சுதந்திரம் கொடுத்தார்கள். இப்போது கலையரசனுடன் நான் நடிக்கும் 'எய்தவன்' படத்திலும் நல்ல வேடம் கிடைத்திருக்கிறது. நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். அதுவே என் லட்சியம்," என்கிறார் சாதனா.