நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தங்களை நடிகர் சங்க நிர்வாகிகள் அழைக்கவில்லை என்று ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்திற்கு நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். ஆனால் நடிகர் சங்கத் தேர்தலில் விஷால், நாசர் அணியை எதிர்த்துப் போட்டியிட்ட சரத்குமார் அணியில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், கிரிக்கெட் போட்டிக்கு தங்களை சங்கத்தின் நிர்வாகிகள் முறையாக அழைக்கவில்லை என்று ராதிகா சரத்குமார் குற்றம் சாட்டியிருக்கிறார்.
"இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைத்திருந்தால் உங்களின் முதிர்ச்சியான அணுகுமுறையும் அனைவரிடமும் இணக்கமாக இருக்கும் தன்மையும் வெளிப்பட்டு இருக்கும். "இதைவிட பெரிய நிகழ்வுகளை நடிகர் சங்கத்திற்காக, நாட்டிற் காக நடத்தியவர்கள் அவர்கள் (சரத்குமார் அணி). அவர்களை அழைக்காததால் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. நீங்கள் என்னையும் அழைக்கவில்லை. சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை," என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் ராதிகா குறிப்பிட்டுள்ளார்.