இளவட்ட ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் சமந்தா. அதுவும் தமிழ் பேசத் தெரிந்த சென்னைவாசியான சமந்தா, இதயநோய் சம்பந்தமாக ஓர் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன்மூலம் 70 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து அவர்களின் இதயத்தை துடிக்க வைத்திருக்கிறார். இன்றைய நடிகைகளில் சிலர் உண்மையாகவே சிரமப்படுவோரைக் கண்டறிந்து, மனப்பூர்வமாக உதவி செய்வது வியப்பாக உள்ளது. ஹன்சிகா செய்யும் கல்வி உதவிகள், ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் பணிகள் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
இப்போது சமந்தாவும் தன் வருமானத்தின் ஒரு பகுதியை ஏழைகளுக்குச் செலவிடும் பணியில் இறங்கியுள்ளார். சாதாரண குடும்பத்திலிருந்து வந்த பெண் என்பதால், நன்றாக சம்பாதிக்கும் காலத்தில் இல்லாதவர்களுக்கு வழங்குவோம் என்ற நோக்கத்துடன் உதவிகளைச் செய்ய ஆரம்பித்துள்ளார். "இந்தப் பணம் முழுவதும் என் வருமானத்தில் வந்த சொந்தப் பணம். இப்போது 70 பேருக்கு உதவியுள்ளேன். உண்மையிலேயே உதவி தேவைப்படுவோருக்கு மேலும் அதிகமாக உதவ நினைத்திருக்கிறேன்," என்று கூறும் சமந்தா, கல்வி உதவி தேவைப்படுவோருக்கும் உதவப் போகிறாராம்.
சமந்தா நடித்த 'தெறி' படம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அவரது '24' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் அவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அடுத்து 'வட சென்னை'யில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.