சிறந்த பின்னணி இசைக்காக தேசிய விருது பெற்ற இளையராஜா, விருதளிக்கும் நிகழ்வில் பங்கேற்காமல் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதளிக்கும் முறையில் குறைபாடு இருப்பதாக அவர் கூறியுள்ளார். "ஒரு படத்திற்காக இசையமைப்பாளர் மெட்டமைக்கும் பாடல்களுக்குத் தனி விருது, பின்னணி இசைக்குத் தனி விருது என்பதை ஏற்க இயலாது.
அப்படியானால் ஓர் இசையமைப்பாளரின் பாதிப் பணியை மட்டுமே அங்கீகரிப்பதாக ஆகிறது. பாடல், பின்னணி இசை ஆகிய இரண்டையும் ஒருசேர மதிப்பீடு செய்தே விருது வழங்க வேண்டும். "இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றுக்கெல்லாம் ஒரே பிரிவின் கீழ் மட்டுமே விருது அளிக்கப்படுகிறது. அது போலவே சிறந்த இசைக்கும் ஒரே விருதுதான் அளிக்கப்பட வேண்டும்," என்கிறார் இளையராஜா. 'தாரை தப்பட்டை' படத்துக்காக இளையராஜாவுக்கு விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.