விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். படத்திற்குப் படம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவருடைய படங்களைப் பார்க்க ரசிகர்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்குச் செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். மேலும் அவருக்கு 'மக்கள் செல்வன்' என்ற பட்டப்பெயரும் கொடுத்து இருக்கின்றனர். இத்தகைய நல்ல பெயர் இருக்கும்போது அவரின் ரசிகர்கள் மனம் புண்படும்படி அவர் நடந்துகொண்டதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. காரைக்குடி அருகில் கானாடுகாத்தான் என்ற கிராமத்தில் 'றெக்க' என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் லட்சுமி மேனன். காரைக்குடிக்கு வந்த சில சுற்றுலாப் பயணிகள் கானாடுகாத்தானில் உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது கோயில் மூடப்பட்டிருந்தது.
அதனால் அவர்கள் அருகில் நடைபெறும் 'றெக்க' படப்பிடிப்பைப் பார்க்கச் சென்றிருக்கின்றனர். ஆனால் அங்கு போய் விஜய் சேதுபதியை சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ள இவர்கள் ஆர்வம் காட்டியபோது அவர் கண்டு கொள்ளவில்லையாம். அதைவிட வயதானவர்கள் என்று கூடப் பாராமல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து நடிகையுடன் கடலைப் போட்டுக் கொண்டிருந்தாராம். அதனால் அவரைப் பார்க்கச் சென்றவர்கள் அதிருப்தி அடைந்து கிளம்பிவிட்டனராம். "பெரிய பெரிய நடிகர்களை எல்லாம் பார்த்திருக்கிறோம். இப்படி யாருமே நடந்ததில்லை. நம்மைப் பார்க்க வந்த ரசிகர்கள் என்று பாசத்தோடு பேசுவார்கள். புகைப்படம் எடுக்க அனுமதிப்பார்கள். இவர் இப்படி மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறாரே," என்று புலம்பியிருக்கின்றனர். 'குமுதா'வை மட்டும் அல்லாமல் ரசிகர்களையும் 'ஹேப்பியா' வச்சுக்க வேணாமா அண்ணாச்சி?' என்று கேட்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.