'பிரேமம்' படத்தில் நடித்த சாய் பல்லவி தற்போது மருத்துவப் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்கிறார். மீண்டும் அவர் நடிக்க வருவாரா என்பதுபற்றி கேட்டபோது, "ஜார்ஜியாவில் மருத்துவப் பட்டம் பெற்ற நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாளாகும். அதன் ஒவ்வொரு நொடியையும் நான் ரசித்து மகிழ்ந்தேன். நடிப்பா? மருத்துவப் பணியா? என்பதுபற்றி எதையும் திட்டமிடவில்லை. ஆனாலும் இன்னும் நல்ல கதைகள் வந்து கொண்டிருக்கின்றன. நடிப்பைத் தொடர விரும்புகிறேன்.
அதேசமயம் மருத்துவ தொழிலையே பெரும்பகுதி சார்ந்திருப்பேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை. படிப்பை முடிப்பதற்காக நடிப்பிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தேன். ஆனாலும் என்னை இணையத்தளத்தில் தொடர்பு கொள்ளும் ரசிகர்கள் நடிகை என்ற முறையிலேயே கருத்துத் தெரிவிக்கிறார்கள். அது எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சிதான். நிறைய வாய்ப்புகள் வந்தாலும் 'பிரேமம்' படத்தில் கிடைத்த 'மலர் மிஸ்' கதாபாத்திரம்போல் நல்ல கதாபாத்திரத்தை எனக்கு இறைவன் அமைத்துக்கொடுப்பார் என்று நம்புகிறேன். அதற்காகக் காத்திருக்கிறேன்," என்று கூறுகிறார் சாய் பல்லவி.