சென்னையிலிருந்து ப. பாலசுப்பிரமணியம்
தென்னிந்திய திரையுலகமே ஒன்றுகூடும் 'சைமா' விருது நிகழ்ச்சியின் தொடர்பில் சென்னையில் முன்னோட்ட பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. துபாயில் கடந்த ஆண்டு கலக்கிய தென் இந்திய கலை உலகப் பிரபலங்கள் இம்முறை சிங்கப்பூர் வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனும் நான்கு இந்திய மொழிகளைச் சார்ந்த திரைப்பட நடிகர்கள் வரும் ஜூன் 30, ஜுலை 1 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் 'சைமா' விருது நிகழ்ச்சியில் ஒன்றுகூட உள்ளனர். ஐந்தாம் முறையாக நடை பெறும் 'சைமா' எனும் தென் இந்திய அனைத்துலக திரைப்பட விருது நிகழ்ச்சியின் முன்னோட்ட செய்தியாளர் கூட்டம் நேற்று முன்தினம் சென்னையின் 'தாஜ் கிளப் ஹவுஸ்' ஹோட்டலில் நடந்தது. இந்த செய்தியாளர் கூட்டத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, குஷ்பு, ராணா டகுபதி, வேதிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
திரைப்பட உலகில் உயரிய விருதுகளுக்குப் பெயர்போன நடிகைக் குஷ்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் சைமா விருது நிகழ்ச்சி பலமடங்கு வளர்ந்துள்ளது, பெருகியுள்ளது என்று கூறினார். ஒட்டுமொத்த தென் இந்தியத் திரை உலகம் ஒரு குடும்பமாக ஒன்றுகூடும் நேரம் இது என்று தெரிவித்த குஷ்பு ஒவ்வொரு விருதும் தகுதியானவருக்கே செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு சிறப்பு நடுவர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். சிங்கப்பூர் தமக்குப் பிடித்தமான நகரங்களில் ஒன்று என்றும் அங்குள்ள ரசிகர்களைச் சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் கூறினார் கூட்டத்தில் பேசிய நடிகர் ஜெயம் ரவி.
விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள... பிரம்மாண்டமான விருது நிகழ்ச்சி சன்டெக் சிட்டி மாநாடு, கண்காட்சி மையத்தில் இம்மாதம் 30ஆம் தேதியும் (தெலுங்கு, கன்னடம்) ஜூலை மாதம் முதல் தேதியும் (தமிழ், மலையாளம்) நடைபெற உள்ளது. நுழைவுச் சீட்டு விவரங்களுக்குச் 'சிஸ்டிக்' நிலையத்தை கீழ்க்கண்ட இணைய முகவரியில் நாடலாம்: http://www.sistic.com.sg/
'சைமா' எனப்படும் தென் இந்திய அனைத்துலக திரைப்பட விருது நிகழ்ச்சியின் முன்னோட்ட செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட (இடமிருந்து) சைமா விருது நிகழ்ச்சியின் தலைவர் பிருந்தா பிரசாத், திரையுலகப் பிரபலங்கள் ஜெயம் ரவி, குஷ்பு, ராணா டகுபதி, வேதிகா, நிக்கி கல்ராணி.
படம்: திமத்தி டேவிட்