'எங்கேயும் எப்போதும்' படத்தில் இணைந்து நடித்தபோது ஜெய், அஞ்சலி இருவருக்கும் காதல் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அதை இருவருமே மறுக்கவில்லை. ஆனால் அப்போது அஞ்சலியின் 'குடும்ப நண்பராக' இருந்த இயக்குநர் களஞ்சியம் என்பவர் ஜெய்யிடமிருந்து அஞ்சலியை மீட்டுத் தரும்படி நடிகர் சங்கத்தில் வாய்மொழிப் புகார் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு சித்தியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய அஞ்சலி ஹைதராபாத்தில் தங்கலானார். அதனால் அஞ்சலி = ஜெய் காதல் விவகாரம் அடங்கிப்போனது. இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜெய், அஞ்சலி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை சினிஷ் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இது காதல் கலந்த திகில் படம் என்றும் பேய் படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்புக் கடந்த ஜுன் 6ஆம் தேதி சென்னையில் தொடங்கியுள்ளது.
இதில் அஞ்சலி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவராக நடிக்கிறாராம். இவர் தொடர்பான காட்சிகளைத் தற்போது படமாக்கி வருகின்றனர். இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்ட இப்படத்தில் நடிப்பவர்கள் எல்லோருமே பேயாக வருகிறார்களாம் என்பதுதான். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வேறு ஒரு நடிகையைத்தான் இயக்குநர் ஒப்பந்தம் பண்ணத் திட்டமிட்டிருந்தாராம். இந்தப் படத்திற்கு அஞ்சலி மிகப் பொருத்தமாக இருப்பார் என ஜெய்தான் அவரை சிபாரிசு செய்து தனக்கு நாயகியாக்கியுள்ளார். அஞ்சலியும் நானும் நண்பர்கள் என்று சொல்லும் ஜெய் அது காதலாக மாறவும் வாய்ப் பிருப்பதாக ஏற்கெனவே சொல்லியிருந்தார்.