அண்மையில் 'ரெமோ' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்து முடிந்தது. அந்த நிகழ்ச்சியில் பிரம்மாண்ட இயக்குநர் சங்கர், சிவகார்த்திகேயனின் பெண் வேடம் கொண்ட முதல் சுவரொட்டியை வெளியிட்டார். அன்றைய நிகழ்ச்சியில் சிவகார்த்தி கேயன் பேசும்போது, "என்னுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகளுக்கு நான் இந்த சமயத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். காரணம் அவர்கள் நடிக்க ஒத்துக்கொண்டிருந்தால் கீர்த்தி சுரேஷுடன் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்காது. அவர் இந்தப் படத்தில் கதைக்கு பொருத்தமாக நடித்து அசத்தியிருக்கிறார்," என்றார்.
'ரெமோ' படத்தில் தான் விரும்பும் ஒரு பெண்ணை அடைவதற்கு ஒருவன் எந்த அளவிற்கு ஆபத்தான வேலைகளில் ஈடுபடுகிறான் என்பதுதான் கதையாம். அதனால் படத்தின் காதாநாயகி முன்னணி நடிகையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்தார்களாம். அதனால்தான் முன்னணி நாயகிகளாகப் பார்த்துப் பேசி யிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மறுக்கவே கீர்த்தி சுரேஷையே கதாநாயகி ஆக்கிவிட்டார்கள்.
"இதுவும் நல்லதுதான் என்று நினைக்கிறேன்," என்று சிவகார்த்திகேயன் கூறினாலும் அவர் மனதில் ஒரு மூலையில் ஏமாற்றத்தின் சிறு வருத்தம் இருப்பதை அறிய முடிந்தது. "அதற்கென்ன சிவா அடுத்த படத்தில்தான் உங்களுடைய விருப்ப நாயகியான நயன்தாராவுடன் இணைய இருக்கிறீர்களே! ஏன் வருத்தப்படுகிறீர்கள்? நீங்கள் உயரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பவர். இனி அனைத்து நடிகைகளும் உங்களுடன் இணைந்து நடிக்க முடியவில்லையே என்று அவர்கள்தான் வருத்தப்படுவார்கள்," என்றார்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள்.