நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தீவிர ரசிகர்களின் கனவு சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் வியாழனன்று நனவானது. அபிமான நட்சத்திரங்களை நேரில் சந்திப்பதுடன் விருதுபெறும் அவர்களின் மகிழ்ச்சியிலும் பங்குகொள்ள ரசிகர்களுக்கு உதவியாக அமைந்தது 'சைமா' எனும் தென்னிந்திய அனைத்துலகத் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி. சன்டெக் சிட்டியில் நேற்று முன்தினம் இரவு ஏழு மணிக்கு மேல் தொடங்கிய தெலுங்கு, கன்னட மொழிகளுக்கான 'சைமா' விருது நிகழ்ச்சிக்கு மதியம் சுமார் 2 மணிக்கே பலரும் வரத் தொடங்கினர்.
வேதிகா, ப்ரணிதா, தேஜஸ்வினி பிரகாஷ், சாய்குமார், சாயிஷா ஆகிய பிரபலங்கள் ஒவ்வொருவராக அரங்கத்தில் கூட, சிரஞ்சீவி, விக்ரம், அல்லு அர்ஜூன், சமந்தா ஆகிய நட்சத்திரங்களின் வருகை முத்தாய்ப்பாக அமைந்தது. ஆடல், பாடல்களுக்கு இடையில் நட்சத்திரங்களின் பெயர்களை உரக்கக் கத்திய ரசிகர்களால் தொடக்கத்திலேயே அரங்கம் களைகட்டத் தொடங்கியது. தெலுங்கு திரைப்படப் பிரபலம் லட்சுமி மஞ்சு, சிறந்த நகைச்சுவை நடிகர் அலி இருவரும் தொகுத்து வழங்கியது சலிப்பின்றி நிகழ்ச்சியை முன்னெடுத்துச் சென்றது.
பிரணிதா, சாயிஷா, ரச்சிதா ராம் ஆகியோரின் கண்கவர் நடனங்களும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஆடலும் பாடலும் ரசிகர்களை இருக்கை களிலிருந்து துள்ளி எழுந்து ஆடவைத்தன. குறிப்பாக, 'மெகா ஸ்டார்' விருது வென்ற நடிகர் சிரஞ்சீவி, வாழ்நாள் சாதனையாளர் விருதுவென்ற பாடகி எஸ்.ஜானகி, 'இளையர் சின்னம்' விருது வென்ற நடிகை சமந்தா ஆகியோருக்காக மக்கள் எழுந்து நின்று கரவொலிகளை எழுப்பி தங்கள் மகத்தான ஆதரவை வெளிப்படுத்தினர். வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற பாடகி எஸ்.ஜானகியின் பாடல்களைக் கோர்வையாக தமது கம்பீரமான குரலில் பாடி 'சைமா' புடவையில் வந்த புகழ்பெற்ற பாடகி உஷா உதுப் புகழாரம் சூட்டினார்.
தெலுங்கு, கன்னடத்திற்கான 'சைமா' விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர், நடிகைளை செல்ஃபி எடுக்கிறார் நடிகர் ராணா.