'சண்டக்கோழி 2' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்க இருப்பதாக வந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். விஷால் ஜோடியாக தாம் நடிப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் இளம் நாயகி மஞ்சிமா மோகன். விஷால் அடுத்ததாக லிங்குசாமி இயக்கவுள்ள 'சண்டக்கோழி 2' படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் நாயகியான மஞ்சிமா மோகன் நடிக்க உள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்தியை மஞ்சிமா மறுத்துள்ளார்.
"இது தொடர்பாக பலர் என்னிடம் விசாரித்தனர். ஆனால் இதுவரை அப்படக் குழுவினர் யாரும் என்னை அணுகவில்லை. அப்படத்திற்காக நான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக வந்துள்ள தகவல் முற்றிலும் வதந்தி," என்கிறார் மஞ்சிமா. 'அச்சம் என்பது மடமையடா' படத்தை அடுத்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் ஒரு படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து வருவதாகவும், வேறு எந்த தமிழ்ப் படத்திலும் இப்போதைக்கு நடிக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.