நடிகர் ஜெய்யும், இளம் நாயகி அஞ்சலியும் காதலிப்பதாக கோடம்பாக்கம் வட்டாரங்களில் பேசப்படுவது தெரிந்த சங்கதிதான். இருவருமே காதலை வெளிப்படையாக அறி விக்கவில்லை. ஆனால் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். ஜெய், அஞ்சலி மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை சூப்பர் சுப்பராயன் தொடங்கி வைத்தார். இருவரும் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு ஜெய்-, அஞ்சலி ஜோடியும், திரையில் அவர்களது உடல்மொழியும் அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
மேலும் இருவருக்கும் இடையே அந்தச் சமயத்தில்தான் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ராசியான ஜோடி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது. புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கும் இந்தப் படம் காதல் கலந்த திகில் படமாக உருவாக இருக்கிறதாம்.
70 எம்எம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என்.அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார், பார்மர்ஸ் மாஸ்டர் பிளான் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. முழுக்க முழுக்க கொடைக்கானலில் படமாக்கப்பட உள்ள இந்தப் படத்தில் ஜெய் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.