அண்மைக்காலமாக நாடெங்கும் கௌரவக் கொலைகள் பெருகி வருகின்றன. தங்களது தகுதிக்கும் குலத்துக்கும் கௌரவத்துக்கும் ஒத்துவராத காதலர்களை பெற்றோரோ, பொதுமக்களோ தாக்கிக் கொன்றுவிடும் போக்கை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் படங்கள் பலவும் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்படி தங்களது காதல் வாழ்க்கையும் எதிரிகளிடம் சிக்கி சின்னபின்னமாகாமல் இருக்க, சிம்புவும் விஜய் சேதுபதியும் அவர்களது காதலியுடன் ஊர் ஊராகத் தப்பியோடி அடைக்கலம் தேடுகிறார்களாம். 'கில்லி' படத்தில் தனக்கு முன்பின் சம்பந்தமே இல்லாத திரிஷாவை காப்பாற்ற ஓடிக் கொண்டேயிருப்பார் விஜய்.
அதன்பிறகுதான் அவர்களுக்கிடையே காதல் உருவாகும். அதுபோல் தற்போது கெளதம் மேனன் இயக்கி வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்பு -மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் உயிருக்கு உயிராகக் காதலிப்பார்களாம். ஆனால் இருவர் வீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர்களைப் பிரிக்க ஒரு அடியாள் கூட்டம் துரத்துமாம். இதனால் அவர்கள் நகரத்தை விட்டு கிராமங்களுக்குச் சென்று ஓடி ஒளிவார்களாம்.
கடைசியில் தில்லாக எதிர்த்து நின்று எப்படி காதலில் வெற்றி அடைகிறார்கள் என்பதுதான் அப்படத்தின் கதையாம். அதேபோல், விஜய்சேதுபதி - லட்சுமி மேனன் இணைந்து நடித்துள்ள 'றெக்க' படத்திலும் அவர்கள் காதலிப்பதை இரண்டு ஊர் மக்களும் எதிர்க்க, அவர்கள் இருவரும் ஒவ்வொரு ஊராக ஓடிக்கொண்டே இருப்பார்களாம். அவ்வகையில், 'அச்சம் என்பது மடமையடா', 'றெக்க' இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட எதிர்ப்பை மீறி காதலர்கள் இணையும் கதையில்தான் தயாராகிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.