விஜய் சேதுபதி பற்றி தினமும் ஒரு கதை வெளியாகிக்கொண்டே இருக்கிறது. இன்றைய செய்தியாக கட்டப்பா என்று அழைக்கப்படும் வாஸ்து மீனுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்திருக்கிறார் என்பதாகும். சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படம் 'கட்டப்பாவை காணோம்.' இந்தப் படத்தின் வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் தமிழ்த் திரையுலகில் முதன் முதலாக ஒரு வாஸ்து மீனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்படும் படமாகும்.
அந்த மீனுக்குப் பெயர் கட்டப்பா. அந்த மீன் காணாமல் போவதும் அதைக் கண்டு பிடிப்பதும்தான் கதை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தை எடுக்கிறார்கள். 'கட்டப்பா' மீன் இந்தப் படத்தில் வசனம் பேசும் காட்சிகள் வருகிறதாம். இந்த மீனுக்குத்தான் விஜய் சேதுபதி குரல் கொடுக்கிறாராம். தான் நடிக்காத படத்திற்கு விஜய் சேதுபதிக் குரல் கொடுப்பது இதுதான் முதல்முறை. இந்தப் படத்தை 'ஈரம்' அறிவழகனின் உதவியாளர் மணிசெய்யான் இயக்கி வருகிறார்.