நடிகை ரெஜினா தனது கண்களைத் தானம் செய்திருக்கிறார். இளம் நடிகைகளில் ஒருவரான இவர் தற்போது 'நெஞ்சம் மறப்பதில்லை', 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்', 'மாநகரம்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிப்பில் கவனம் செலுத்தி னாலும் மற்றவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்பதிலும் ஆர்வமாக இருக்கிறார் ரெஜினா. அண்மையில் நெல்லூரில் கண் மருத்துவமனை ஒன்றைத் திறந்து வைத்த இவர், அங்கேயே தனது கண்களைத் தானம் செய்து அதற்கான ஒப்புதல் பத்திரத்திலும் கையெழுத்திட்டார்.
"உடல் உறுப்புத் தானம் மூலம் இறந்தபிறகும் மற்றவர்களுக்கு நாம் உதவ முடியும். திரை உலகின் பிரபல நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் தங்கள் உடல் உறுப்புகள் மற்றும் கண்களைத் தானம் செய்திருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் தற்போது நானும் இடம் பிடித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி தருகிறது," என்கிறார் ரெஜினா. நல்ல விஷயம். அம்மணியைப் பாராட்டுவோம்!