எதுகுறித்தும் கவலைப்படாத சிவகார்த்திகேயன் தொடர்பான மூன்று புதிய தகவல்களைத் தெரிந்து கொள்வோமா? அவர் நடிக்கும் 'ரெமோ' படத்தில் ஆங்கிலத்தில் பாடல் ஒன்று இடம்பெறுகிறது. இதில் அவருக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படம் இது. இதன் விளம்பரத்திற்காக 'சிரிக்காதே' என்று தொடங்கும் இசைத் தொகுப்பு ஒன்றைப் படக்குழுவினர் உருவாக்கி உள்ளனர். இந்தத் தொகுப்பை பிரபு ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார். இவர், 'ரெமோ' படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவின் தயாரிப்பில் நிவின்பாலி நடிக்க இருக்கும் படத்தை இயக்குபவர்.
மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் 'சிரிக்காதே' இசைத் தொகுப்புக்கு இசையமைத்திருப்பவர் அனிருத். பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஸ்வரூப் பிலிப் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், அனிருத், அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதி வெங்கடேஷ், இன்னொ கெங்கா, மரியா, ஷாஷங்க் விஜய், கெபா ஜெர்மியா ஆகியோர் தோன்றுவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த இசைத் தொகுப்பை தமிழைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இந்தப் பாடலை இன்னொ கெங்கா என்பவர் பாடியிருக்கிறார்.
இதற்கிடையே, 'ரஜினி முருகன்' கூட்டணி அடுத்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் இணையப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இயக்குநர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளிவந்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணி மீண்டும் இணையவிருப்பது தெரிந்த விஷயம்தான்.
தற்போது சிவா நடித்து வரும் 'ரெமோ' படத்தை தயாரித்து வரும் '24 ஏ.எம். ஸ்டூடியோஸ்' நிறுவனம்தான் இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்தை தயாரிக்கப்போவதாக தெரிய வந்துள்ளது. இப்படம் மட்டுமில்லாது, சிவகார்த்திகேயன், மோகன்ராஜா இணையவிருக்கும் படத்தையும் இதே நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளதாம்.