சிவகார்த்திகேயன் படத்தில் முதன்முறையாக சினேகா இணைந்துள்ளார். 'ரெமோ'வைத் தொடர்ந்து மோகன்ராஜா இயக்கும் புதுப்படம் ஒன்றிலும், பொன்ராம் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த இரண்டு படங்களையும் அவரது நண்பர் ஆர்.டி.ராஜா பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். இதில், மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது தெரிந்த சங்கதியே. தற்போது சினேகா, தம்பி ராமையா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
தன் திருமணத்திற்குப் பிறகு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த சினேகா தாய்மையடைந்த பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அவருக்குக் குழந்தை பிறந்து ஓராண்டு ஆன நிலையில் மீண்டும் சினிமாவில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார். சிவகார்த்திகேயன் படம் மட்டுமின்றி மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். "சிவகார்த்திகேயனுடன் நடிப்பது உற்சாகமாக உள்ளது. இந்தப் படத்தில் எனக்கேற்ற கதாபாத்திரம் கிடைத்துள்ளது," என்கிறார் சினேகா.