மலையாளத்தில் வெளிவந்த 'பிரேமம்' படம் தெலுங்கில் மறுபதிப்பு செய்யப்பட்டு வருகிறது. 'பிரேமம்' படத்தில் சாய் பல்லவி நடித்த கதாபாத்திரத்தில் ஷ்ருதிஹாசன் நடித்துக்கொண்டிருக்கிறார். அண்மையில் அந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்று இணையத்தில் வெளியானது. அதைப் பார்த்து மலர் டீச்சரின் ரசிகர்கள் கவுண்டமணி, வடிவேல் மற்ற படங்களில் கிண்டல் செய்யும் காட்சிகளை ஷ்ருதிஹாசனை கிண்டல் செய்வது போல் காட்சிகளை ஒருமைப்படுத்தி இணையத்தில் பதிவுகளைப் போட்டிருந் தனர்.
அதைப் பார்த்த ஷ்ருதிஹாசன் "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். என்னுடைய திறமையை நான் எப்பொழுதும் முழுமையாகப் பயன்படுத்துவேன். அதைப் பாராட்டுங்கள். அதை விட்டுவிட்டு நடிகர்களைக் கேவலப்படுத்தாதீர்கள்," என்று இணையத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
மலர் கதாபாத்திரத்தில் ஷ்ருதிஹாசன் நடிக்கிறார் என்ற தகவல் வந்தபோதே ரசிகர்கள் கவலைப்பட ஆரம்பித்தார்கள். அந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது முதன் முதலில் ஒரு புகைப்படம் வெளியானது. அப்போதே 'பிரேமம்' படத்தின் அதிதீவிர ரசிகர்கள் ஷ்ருதிஹாசனை பலமாதிரியாகக் கிண்டல் செய்து அவரை அலற வைத்தார்கள். தற்போது மீண்டும் அப்படி ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு 'பிரேமம்' தெலுங்கு படத்தின் 'எவரே..' என்ற பாடல் வெளியானது.
அதில் ஷ்ருதிஹாசனின் நடிப்பையும் நடை, உடையையும் பொறுத்துக்கொள்ள முடியாத 'பிரேமம்' படத்தின் தீவிர ரசிகர்கள் மீண்டும் ஷ்ருதிஹாசனை கிண்டல் செய்து படங்களை உருவாக்கி இணையத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். அதைப் பார்த்த படக்குழுவினரே பயந்துபோய் இணையத்தில் வரும் பதிவுகளைத் தடுக்கும் அளவிற்கு செயல்பட ஆரம்பித்திருக் கின்றனர். அண்மைய பேட்டி ஒன்றில் ஷ்ருதிஹாசன் "பிரேமம்' தெலுங்குப் படத்தை மலையாளப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். "அந்தக் கதாபாத்திரத்தில் முதலில் நான் நடிக்கத் தயங்கினேன். ஆனால், இயக்குநர் கவனமாக அந்தப் படத்தை படமாக்குவேன் என்று கூறினார்.
"அந்தப் படத்தின் கதாநாயகன் நாகசைதன்யா. அவர் என்னுடைய நண்பர். அதனால் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன். 'பிரேமம்' தெலுங்குப் படத்தை புதிதாகப் பார்ப்பதுபோல் பார்த்து ரசியுங்கள்," என்று கேட்டுக் கொண்டுள்ளார். 'பிரேமம்' படத்தைப் பார்க்காதவர்கள் வெகு சிலரே என்பது ஷ்ருதிஹாசனுக்குத் தெரியவில்லை. அவர் அப்படிக் கேட்டுக் கொண்டாலும் ரசிகர்கள் சும்மா இல்லாமல் அவர்கள் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மலர் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி நடிப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது என்கின்றனர் ரசிகர்கள்.