அனுஷ்கா போல அதிரடிப் படங்களில் நடித்து முத்திரை பதிக்க ஆசை என்று நடிகை அருந்ததி நாயர் தெரிவித்துள்ளார். 'பொங்கி எழு மனோகரா' படத்தில் நடித்த இவர், தற்போது 'விருமாண்டியும் சிவனாண்டியும்', 'சைத்தான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து விதார்த் நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். வேறு சில படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம். "நான் நயன்தாராவின் ரசிகை. நடிப்பில் அவரைப் பின்பற்றுகிறேன். என்றாலும், கவர்ச்சியில் அளவைத் தாண்டமாட்டேன். அனுஷ்கா போன்று அதிரடி வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு.
"அவர் நடித்த 'அருந்ததி', 'ருத்ரமா தேவி' படங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இந்தப் படங்களில் அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக அதிரடி நாயகர்களுக்கு இணையாக தனது பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். "என்னை நடிப்பில் மிரட்டிய முதல் நடிகை அனுஷ்காதான். நான் 5 அடி 8 அங்குல உயரம் இருக்கிறேன். என்னைப் பார்ப்பவர்களும் நான் அதிரடிக் கதைகளுக்குப் பொருத்தமான நாயகியாக இருப்பேன் என்கிறார்கள். எனவே வரும் காலத்தில் அத்தகைய கதைகளில் நடித்து முத்திரை பதிக்க விரும்புகிறேன்," என்கிறார் அருந்ததி நாயர்.