பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை சுஜிபாலா கத்தாரில் நட்சத்திர தங்கு விடுதியில் பணியாற்றி வரும் ஊட்டியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுஜிபாலா. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், அதனைத் தொடர்ந்து சினிமா நடிகையானார்.
'அய்யா வழி', 'முத்துக்கு முத்தாக', 'சந்திரமுகி', 'கோரிபாளையம்' போன்ற பல தமிழ்ப் படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், சுஜிபாலாவுக்குத் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வரன் தேடி வந்தனர். அதன்படி ஊட்டியைச் சேர்ந்த பிரனேஷ் என்பவர் மாப்பிள்ளையாகத் தேர்வு செய்யப்பட்டார். இவர்களது திருமணம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. பிரனேஷைத் திருமணம் செய்துகொள்வதற்காகக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுஜிபாலா கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகத் தனது பெயரை சுஜிதா எனவும் அவர் மாற்றிக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.