நடிகர் விஷாலும் நடிகை வரலட்சுமியும் ஒருவருக்கொருவர் காதலித்து வருவது ஊரறிந்த விஷயமே. ஆனால், நடிகை வரலட்சுமியின் தந்தை சரத்குமாருக்கும் விஷாலுக்கும் நாளுக்கு நாள் மோதல் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சங்கப் பொதுச்செயலாளராக இருக்கும் விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை அதிரடியாக நீக்கினார்.
இதனை அறிந்த திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. சரத்குமாரின் மனைவி ராதிகா டுவிட்டரில் விஷாலைச் 'சூனியக்காரன்' எனத் திட்டினார். சரத்குமாரோ இதனால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். முறைகேடு செய்ததாக ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவதாகவும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என்றும் சரத்குமார் கூறினார். "நடிகர் சங்கத்தில் இருந்து என்னையும் ராதாரவி, வாகை சந்திரசேகர் போன்றோரையும் தற்காலிகமாக நீக்கம் செய்து சங்கத்தின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
"இது சம்பந்தமான அறிவிப்பு எதுவும் இதுவரை எனக்கு வரவில்லை. தற்போதைய நிர்வாகிகள் தொடர்ந்து என் மீது காழ்ப்புணர்ச்சியோடு நடப்பதும் அவதூறு பரப்பி எனது பெயருக்குக் களங்கம் விளைவிப்பதுமாக இருக்கிறார்கள்," என்று அவர் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதனையெல்லாம் கூர்ந்து கவனித்த வரலட்சுமி, தந்தையின் வருத்தத்தைப் பொறுக்கமுடியாமல் தவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்து வரலட்சுமி விஷாலைக் கடுமையான வார்த்தைகளில் திட்டியதாகச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
தந்தை சரத்குமாருக்கு எதிராக விஷால் செயல்பட்டதால் அவரைத் திட்டியுள்ளார் வரலட்சுமி. படம்: இணையம்