'குற்றமே தண்டனை' படத்தின் மூலம் மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர், இயக்குநர் 'காக்கா முட்டை' புகழ் மணிகண்டன். அடுத்து படத்திற்காக விஜய் சேதுபதியுடன் களமிறங்கி உள்ளார். அந்தப் படத்தின் பெயர் 'ஆண்டவன் கட்டளை'. இதன் கதைக்களம் என்ன? "கடப்பிதழ், ஓட்டுநர் உரிமம், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட விஷயங்களில் வழக்கமான வழிமுறைகளில் சென்றால் நீண்ட நாட்களாகும் என நினைத்து விரைவில் கிடைக்க இடைத்தரகர்களை நாடுகிறோம். "அவர்கள் சில சமயம் நம்மைப் பெரிய சிக்கலில் மாட்டிவிட்டுப் போய்விடுவார்கள். அப்படி ஒருவன் இடைத்தரகர்களின் பேச்சைக் கேட்டுத் தன் பெயரை மாற்றிப் போடுகிறான். அந்தப் பெயர் மாற்றம் அவனுடைய வாழ்க் கையையே மாற்றுகிறது. "அருள்செழியனின் கதைக்கு நான் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறேன். இப்போ துள்ள அவசர வாழ்க்கைக்கு மிகவும் தேவையான கதை இது. தற்சமயம் மிகவும் அவசியமான நேர்மை சிறிது கூட இல்லாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த முக்கியமான விஷயத்தை நகைச்சுவையாக, குடும்பத்துடன் ரசிப்பதுபோல எடுத்திருக்கிறேன்.
நாயகனாக விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்யக் காரணம்?
"அவரைப் போன்ற ஒரு பெரிய நடிகர் நடிக்கும்போது என்னுடைய கவனம் காட்சியமைப்பில் இன்னும் அதிகமாக இருக்கும். பெரிய நடிகர் என்று நான் சொல்வது சம்பளத்தை வைத்து அல்ல, நடிப்பை வைத்துத்தான். என்னைப் பொறுத்தவரை எவன் நன்றாக நடிக்கிறானோ அவன் பெரிய நடிகன். அவனுக்குக் காட்சிகள் எழுதும்போது ரொம்பவே கவனமாக எழுத வேண்டும். "இந்தக் காட்சி இவ்வளவு நன்றாக இருக்கிறதே... இதில் எப்படி நடிப்பது என நடிகனுக்குத் தோன்ற வேண்டும். அவ்வாறு இப்படத்தில் நிறைய காட்சிகள் இருக்கின்றன.