விஜய் நடிக்கும் 'பைரவா' படம் பற்றி இதுவரை ரசிகர்களுக்குத் தெரியாத சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. விஜய் நடிப்பில் பரதன் இயக்கும் புதிய படம் 'பைரவா'. இதன் படப்பிடிப்பு கடந்த இரு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், சதீஷ், டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், ஜெகபதி பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், பாப்ரி கோஷ், அபர்ணா வினோத், ஹரிஷ் உத்தமன், ஆடுகளம் நரேன், விஜய் ராகவன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும், இப்படம் பற்றி பலருக்கும் தெரியாத சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 'பைரவா' படத்தின் கதை கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறதாம்.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பாப்ரி கோஷ் நடிக்க, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் பரிந்துரை செய்தாராம். பாப்ரி கோஷ் ஏற்கெனவே எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த 'டூரிங் டாக்கீஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 'பைரவா' படத்தில் எக்காரணத்தைக் கொண்டும் அதிரடி, அரசியல் வசனங்கள் இருக்கக்கூடாது என்று இயக்குநரிடம் விஜய் கேட்டுக்கொண்டாராம். அதே நேரத்தில் ஒவ்வொரு வசனமும் ரசிகர்களின் மனதில் தைக்கும் வகையில் உணர்ச்சி பூர்வமாக, யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம். இப்படத்தில் விஜய் கிராமத்து இளைஞர், மருத்துவக் கல்லூரி மாணவர் என இரு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். மற்ற படங்களைப் போலவே விஜய் இந்தப் படத்திலும் ஒரு பாடல் பாட உள்ளார். அந்தப் பாடலை விரைவில் ஒலிப்பதிவு செய்ய உள்ளனர்.