நடிக்க வந்த புதிதில் நவீன ஆடைகளைத் தான் தேர்வு செய்ததற்குப் எழுந்த எதிர்மறை விமர்சனங்கள் தன்னை நம்பிக்கையிழக்கச் செய்த தாக கூறிய டாப்சி, இப்போதெல்லாம் தனது உடைகளைத் தன் விருப்பப்படி அணிவதாகக் கூறியுள்ளார். நாகரிக ஆடைகள் அணிவதில் நீங்கள் கவனம் செலுத்துவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அவர், "இல்லை. தொடக்கத்தில் கவனம் செலுத்தினேன். நான் தேர்வு செய்து நாகரிக ஆடைகளை அணிந்தபொழுது எனக்குக் கிடைத்த விமர்சனங்கள் எனக்கு வருத்தத்தை அளிக்கும் வகையில் இருந்தது.
"ஆனால் அந்த விமர்சனங்களை முற்றிலும் ஒதுக்கிவிடாமல் அவற்றில் இருந்து என்னை ஓரளவு மாற்றிக்கொண்டேன். "அதேசமயம் ஒவ்வொருவரையும் என்னை விரும்ப செய்ய முயற்சிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று என்பதையும் நான் உணர்ந்தேன்.
"அதன் பின்னர், நான் சரியான ஆடைகளை அணி கிறேன் என மக்களைத் திருப்தி செய்ய முயற்சிப்பதை நிறுத்திவிட்டேன்," என்று அவர் கூறியுள்ளார். "நம்மால் ஒருபொழுதும் மற்றவரைத் திருப்தி செய்ய முடியாது. அதேபோல் பிறர் விரும்புகிற மாதிரி ஆடைகளை நாம் அணியமுடியாது.
"அதனால் நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் விசயத்தினை நாம் செய்யவேண்டும். என் விருப்பத்திற்கேற்ப உடைகள் அணிகி றேன். இப்பொழுது எல்லாம் எனது ஆடைகளைத் தேர்வு செய்வது என்பது எனக்கு வசதியாகிவிட்டது," என்று கூறினார். இதற்கிடையே, டாப்சி நடிப்பில் இந்தியில் வெளியான 'பிங்க்' படத்தைத் தற்போது, தெலுங்கிலும் தயாரிக்க தயாரிப்பாளர் எண்ணம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியில் சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த இப்படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்திருந்தார் டாப்சி.