வெங்கட் பிரபுவுடன் மீண்டும் சூர்யா இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த 'மாசு என்கிற மாசிலாமணி' மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு தற்போது 'சென்னை 600 0028' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் வெங்கட் பிரபுவுடன் சூர்யா இணையப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் எதற்காக என்பதுதான் முக்கியம். 'சென்னை 600028' இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பாடல் குறுந்தகடை வெளியிட உள்ளார். இது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் 7ஆம் தேதி இந்த விழா நடைபெற இருக்கிறது. இதில், படத்தில் நடித்துள்ள அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 'சென்னை 600028' முதல் பாகத்தில் நடித்த ஜெய், மிர்ச்சி சிவா, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, பிரேம்ஜி அமரன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர்.