நடிகை காஜல் அகர்வால் இனி கதைகளைத் தேர்வு செய்யும்போது நிதானமாக இருப்பேன் என்று கூறியுள்ளார். அண்மையில் காஜல் அளித்த பேட்டி ஒன்றில், "தமிழ், தெலுங்கு படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகை என்ற பெயரும் வாங்கிவிட்டேன். "என் சினிமா வாழ்க்கையைத் திரும்பி பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமாவில் அறிமுகமானபோது எந்தத் திட்டமும் இல்லை. இயக்குநர்கள் சொல்லி தந்ததை மட்டுமே செய்தேன்.
"திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளருவேன் என்றோ, சினிமாதான் இனிமேல் என் உலகம் என்றோ அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. "ஒவ்வொரு படத்திலும் முதல் நாள் நடிக்க செல்லும்போது இதுதான் எனது கடைசி படம் என்றுதான் நினைத்துக்கொள்வேன். ஆனால் காலம் என்னை சினிமாவில் நிரந்தர நடிகை யாக்கி விட்டது. "இப்போது பட வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால் இப்போது எல்லோரும் என்னை மூத்த நடிகை என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் எனக்குள் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. "இனி புதிய முயற்சிகளில் ஈடுபடுவேன். வருகிற படங்களில் எல்லாம் நடிக்கமாட்டேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வுச் செய்து நடிப்பேன். "கதாபாத்திரங்கள் எனக்கு ஆத்ம திருப்தியைக் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களில்தான் நடிப்பேன். "முன்பு போல் ஓடிக்கொண்டே இருக்கமாட்டேன். நிதானமாக கதை களைத் தேர்வுச் செய்து நடிப்பேன். "வாழ்க்கை மிகவும் சிறியது. எனவே இனி ஒவ்வொரு வினாடியையும் அனுபவிக்க முடிவு செய்து இருக்கிறேன்," என்று காஜல் அகர்வால் கூறினார்.