திரையுலகம் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. நிறைய மகிழ்ச்சியான தருணங்களையும் தந்திருக்கிறது என்கிறார் விவேக். "நான் திரையுலகில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகி விட்டன. நகைச்சுவை நடிகர் என்பதைத் தாண்டி, அப்துல் கலாம் ஐயாவின் அன்புக்குப் பாத்திரமான வன், சமூக சேவையில் ஆர்வம் உள்ளவன் என்று மக்களிடையே நற்பெயரைப் பெற்றிருக்கிறேன். 'சின்னக் கலைவாணர்' என்ற பட்டத்தைக் கொடுத்து என்னை கௌரவித்திருக்கிறார்கள். "இத்தனை அனுபவம் இருந்தும் ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை. ஒரு படத்தின் வெற்றி தோல்வியை என்னால் கணிக்க முடியவில்லை," என்கிறார் விவேக்.
தற்போது நடிக்கும் படங்கள்?
"இப்போது 'காஸ்மோரா' படத்தில் நடிக்கிறேன். 'ரம்' க்ரைம் த்ரில்லர். அது நல்ல கதாபாத்திரம். அதில் என் கதாபாத்திரமும் ஸ்டைலும் பேசப்படும். 'துப்பறியும் சங்கர்' மீண்டும் நாயகனாக களம்காண இருக்கிறேன். இதில் கமாலினி முகர்ஜி நாயகி. ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. கௌதம் கார்த்திக்குடன் 'முத்துராமலிங்கம்' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறேன். ராதாமோகன் இயக்கத்தில் 'பிருந்தாவனம்', ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இயக்கி நடிக்கும் 'மீசை முறுக்கு' என்று நிறைய படங்களில் நடிக்கிறேன்." கார்த்தியுடன் நடிப்பது குறித்து? "கார்த்தியுடன் 'தோழா' படத்தில் நடித்தேன். அதன் பிறகு அவருடன் இப்போது 'காஸ்மோரா'வில் நடிக்கிறேன். சிவகுமார் சார் எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். ஆனால் 'காஸ்மோரா'வில் அவர் மகன் கார்த்திக்கு அப்பாவாக நடிக்கிறேன்.
படப்பிடிப்புக்கு நான் சாதாரண உடையில் சென்றால், 'இவர் எனக்கு தம்பி மாதிரி இருக்கிறாரே, இவரா எனக்கு அப்பாவாக நடிக்கப்போறார்?' என்று கார்த்தி கிண்டலடிப்பார். நான் கேரவனுக்குள் சென்று தாத்தா வேடம் போட்டு வந்த பிறகுதான் நிம்மதி அடைவார். "கார்த்தியை எனக்கு மிகவும் பிடிக்கும். 'தோழா' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த சமயம். அப்போது சென்னை நகரமே மழை வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. கார்த்தி நடிகர் சங்கத்துக்குத் தொலைபேசியில் அழைத்து, 'என்ன உதவி வேணும், யாருக்கு என்ன தரணும்' என்று அவ்வப்போது கேட்டு பல உதவிகளைச் செய்தார்.