பாலியல் பலாத்காரங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் நலனுக்காக நடிகை ராகுல் பிரீத்சிங் நிதி திரட்டுகிறார். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் பிரபலமானவர்களை வைத்து வருகிற 20ஆம் தேதி உடற்பயிற்சி தொடர்பான கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போகிறாராம். ராகுல் பிரீத்சிங்கும் இதில் பங்கேற்று பல்வேறு வகையான உடற்பயிற்சிகளைச் செய்து காட்ட உள்ளார். இவர் அண்மையில் சொந்தமாக உடற்பயிற்சி மையம் ஒன்றைத் திறந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இக்கண்காட்சியில் வசூலாகும் தொகையைப் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலனுக்காக வழங்குகிறார். ராகுல் பிரீத்சிங்கின் இந்த நடவடிக்கைக்குத் தெலுங்கு பட உலகில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உடற்பயிற்சிகள் செய்து காட்ட இருக்கிறார்கள்.