மும்பையைச் சேர்ந்தவர் நடிகை பாருல் யாதவ். இவர் தமிழில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் 'டிரீம்ஸ்' என்ற படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் 'புலன் விசாரணை=2' படத்திலும் கதாநாயகியாக நடித்தார். இதேபோல 'புல்லட்', 'கிருத்தியம்', 'பிளாக் டாலியா' உள்பட பல மலையாளப் படங்களிலும் கன்னடம் மற்றும் பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். நடிகை பாருல் யாதவுக்கு நாய்கள் மீது அதிக பிரியம் என்பதால் அவர் மும்பை ஜோகேஸ்வரியில் உள்ள தனது வீட்டில் சில நாய்களை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் தனது வளர்ப்பு நாயுடன் அந்தப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கே சுற்றித் திரிந்த சில தெரு நாய்கள் நடிகை பாருல் யாதவின் நாயைப் பார்த்துக் குரைத்துள்ளன. அந்த நாய்களிடமிருந்து தனது நாயைக் காப்பாற்றுவதற்காக அவர் அவைகளை விரட்டினார். அதனால் அந்தத் தெரு நாய்கள் நடிகை பாருல் யாதவ் மீது பாய்ந்து அவரைக் கடித்துக் குதறின. ஒரே நேரத்தில் 6 நாய்களின் தாக்குதலுக்கு ஆளானார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தவர்கள் அங்கு ஓடி வந்து நாய்களை விரட்டி அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். நாய்கள் கடித்துக் குதறியதில் பாருல் யாதவ்வின் முகம், கழுத்து, கை ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.