புதிய படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி உள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தை முடித்த பின்னர், சாமி படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் ஹரி. சாமியின் முதல் பாகத்தில் திரிஷா நடித்திருந்தார். எனவே அடுத்த பாகத்திலும் அவரே நாயகியாக நடிப்பார் எனக் கூறப்பட்டது. மேலும் முதல் பாகத்தில் நடித்தவர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார். அவரது கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க தீர்மானித்துள்ளாராம் ஹரி. சிங்கம் படத்தின் இரு பாகங்களில் இரண்டு நாயகிகள் நடித்திருந்தனர். அதே வழக்கத்தை சாமி-2லும் கடைப்பிடிக்க ஹரி தீர்மானித்திருப்பதாகக் கேள்வி. கீர்த்தி சுரேஷ் தற்போது சூர்யாவுடன் இணைந்து 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாண் படத்திலும் நடிக்கிறார்.