"பவர் பாண்டி படத்தின் வெற்றியை நான் எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு ஊக்ககரமான விமர்சனங்களை நிச்சயமாக நான் எதிர்பார்க்கவில்லை. குடும்பம், குடும்பமாகச் சென்று படம் பார்த்துவிட்டு வருகிறார்கள். ஷங்கர் சார், கௌதம் மேனன், சமுத்திரக்கனி அண்ணன் என்று பலரிடம் இருந்தும் பாராட்டுகள் வந்து குவிகின்றன," என்று மகிழ்ச்சியுடன் கூறினார் இயக்குநர் தனுஷ். தனுஷ் முதன்முதலாக இயக்கி இருக்கும் படம் 'பவர் பாண்டி'. இந்தப் படத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இளம் வயது ராஜ் கிரணாக தனுஷ் நடித்திருக்கிறார்.
60 வயதுகளில் இருக்கும் பெரியவர்களின் வாழ்க்கையை அப்பட்டமாக இந்த இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் வகையில் படத்தை எடுத்திருந்தார். படத்தில் ராஜ் கிரண் தன் பேரப்பிள்ளைகளுடன் விளையாடுவதும் மகன், மருமகளுடன் உரையாடுவது அனைத்தும் நம்முடைய வாழ்க்கையில் நடப்பது போல இருப்பதால் அனைத்து வயதினரையும் கவர்ந்திருக்கிறது இந்தப் படம். இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே 60 வயதிற்கு மேற்பட்டவரின் காதலைச் சொல்ல வேண்டும் என்று எப்படித் தோன்றியது என்று கேட்டதற்கு, "சில நேரம் நான் என்னையே 60 வயசு ஆளாக கற்பனை செய்து பார்ப்பேன். 60 வயதானால் நான் என்னவெல்லாம் செய்வேன் என்று யோசிப்பேன். பெரும்பாலான எழுத்தாளர்கள், தங்களை அந்த இடத்தில் வைத்துதான் அனுபவித்து கதை எழுதுவார்கள். அப்படித்தான் நானும் இந்தக் கதையை உருவாக்கினேன்.