இயக்குநர் பாண்டிராஜ் பாணியில் அவருடைய உதவியாளரான வள்ளிகாந்தும் கிராமம் சார்ந்த படத்தின் இயக்குநராக அறிமுக மாகவுள்ளார். 'எங்கிட்ட மோதாதே' இயக்குநர் ராமுவின் கல்யாண வாழ்வில் நடந்த உண்மை கதைதான் 'செம' படத்தின் கதை என்கிறார் வள்ளிகாந்த். "பொதுவாகவே ஒவ்வோர் ஆணுக்கும் திருமணத்துக்குப் பெண் பார்க்கும் படலம் தொடங்கி அது முடிவது வரை சாதாரண விஷயம் கிடையாது. அப்படித்தான் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு மூன்று மாதத்துக்குள் திருமணம் செய்யவில்லை என்றால் அடுத்துவரும் ஆறு ஆண்டுகளுக்குத் திருமணம் நடக்காது என ஜோதிடர் சொல்லிவிடுவார். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு காரணத்தால் ஜி.வி. பிரகாஷை வேண்டாம் எனச் சொல்லிவர, ஒரே ஒரு பெண் வீட்டில் மட்டும் சரி என்று சொல்லி உறுதி செய்யும் நேரத்தில் பிரச்சினை வரும். அப்பிரச்சினை என்ன? இருவருக்கும் திருமணம் நடைபெற்றதா? அப்பிரச்சினையை நாயகன் எப்படி எதிர்கொண்டார் என்பதுதான் 'செம' படத்தின் கதைக்," என்கிறார் இயக்குநர் வள்ளிகாந்த்.
நாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார், நாயகியாக அர்த்தனா, மன்சூர் அலிகான், கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட அனைவருமே 'செம' படத்தில் அவரவர் பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர். மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தாலும் அவர் செய்யும் ரகளைகள் படம் பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கும் என்கிறார் இயக்குநர் வள்ளிகாந்த்.