இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறும் காலம் இது. இந்நிலையில், நடிகை ஒருவர் பாடலாசிரியராக உருவெடுத்துள்ளார். 'சென்னை 600028', 'அஞ்சாதே' உள்ளிட்ட படங்களில் நடித்த விஜயலட்சுமி தான் அந்த நடிகை. தற்போது கிருஷ்ணா, கயல் ஆனந்தி நடிக்கும் 'பண்டிகை' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார் விஜயலட்சுமி. இப்படத்தை பெரோஸ் இயக்க, ஆர்.எச்.விக்ரம் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் ஒரு பாடல் எழுத வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டாராம் விஜயலட்சுமி. "கவிதைகள் எழுதும் வழக்கம் கொண்டவர் விஜயலட்சுமி. அவரது பல கவிதைகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 'பண்டிகை' படத்தின் ஒரு பாடலுக்காக நாங்கள் சில பாடலாசிரியர்களை அணுகினோம். அவர்கள் தந்த வரிகள் எனக்குத் திருப்தி அளிக்காத நிலையில், விஜயலட்சுமியே தான் எழுதலாமா எனக் கேட்டார். நானும் தடுக்கவில்லை. "ஒரு சில நாட்கள் கழித்து அவர் எழுதியிருந்த வரிகளைப் படித்து மலைத்துப் போனேன். இசைக்கும் கதை நிலவரத்திற்கும் கச்சிதமாகப் பொருந்தும் வரிகள்," எனப் பாராட்டுகிறார் இயக்குநர் பெரோஸ்.