பெண் இயக்குநர்கள் என்றாலே, ஏதேனும் கண்ணீர்க் கதையோடு வந்து திரையரங்கையும் கண்ணீரில் மிதக்கவிட்டு, அடுத்த படம் கிடைக்காமல் தானும் கண்ணீரில் மிதப்பார்கள் என்பதுதான் கோடம்பாக்கத்தில் பலரது கருத்தாக உள்ளது. இந்நிலையில், இந்தக் கருத்தைக் கூறுபவர்களை யோசிக்க வைத்திருக்கிறார் இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா. இதன் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டாராம்.
தனது இரண்டாவது சுற்றுக்காக சென்னை வந்திறங்கிய அவருக்கு, தன் கதையை யாரிடம் சொல்லி கால்ஷீட் பெறுவது என்பதில் ஏகப்பட்ட தயக்கம், குழப்பம். முதலில் விஜய் சேதுபதியைச் சந்தித்து கதை சொன்னார். என்ன குழப்பமோ, அதன் பிறகு அவர் அணுகியது சிவகார்த்திகேயனை என்கிறார்கள். இரு நடிகர்களுமே சுதாவின் கதையைக் கேட்டு அசந்து போனதாகக் கேள்வி. எனினும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்நிலையில், சுதாவை வரவேற்று உபசரித்துள்ளார் சூர்யா. அநேகமாக சுதாவின் அடுத்த பட நாயகன் சூர்யாதான் என்று முடிவாகி இருக்கிறதாம். இந்தப் படத்தை தனது சொந்த நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கிறாராம் சூர்யா.