காஜல் அகர்வால் தற்பொழுது நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தில் பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். பெரும்பாலும் படங்களில் நடிகைகள் அணியும் நகைகள் போலியாகவே இருக்கும். ஆனால் 'ருத்ரம்மதேவி' படத்தில் அனுஷ்கா ஏற்ற ராணி வேடத்திற்காக பல லட்சங்கள் மதிப்புள்ள உண்மையான தங்கக் கிரீடம், நகைகள் வரவழைக்கப்பட்டன. அதுபோல் தற்போது காஜல் அகர்வால் நடிக்கும் 'நேனு ராஜு நேனு மந்த்ரி' தெலுங்கு படத்திற்கு உண்மையான நகைகளைப் பயன்படுத்த முடிவு செய்தார் இயக்குநர். அதனால் நகைக்கடை அதிபர் ஒருவரிடம் பெரும் தொகையை முன்பணமாகக் கொடுத்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை வரவழைத்திருக்கிறார் தயாரிப்பாளர்.
அத்துடன் அந்த நகைக் கடையையும் படத்தின் மூலம் விளம்பரப்படுத்துவதாக ஒப்பந்தம் போடப்பட்டு நகைகள் வரவழைக்கப் பட்டிருக்கின்றன. காஜல் அவற்றை அணிந்து படத்தில் நடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தினமும் நகையைக் கொண்டு வருவதற்கும் திரும்ப எடுத்துச் செல்வதற்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் காஜல் அவற்றை அணிந்து படப்பிடிப்பு நடந்ததாம். அவர் எங்கு சென்றாலும் அவரைத் தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் சென்றனராம். மேலும் படப்பிடிப்புத் தளத்தில் படப்பிடிப்பு குழுவினரைத் தவிர வேறு யாரும் உள்ளே நுழையாதபடி பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு இருந்ததாம். படப்பிடிப்பு முடிந்து அந்த நகைகளை ஒப்படைத்த பிறகுதான் முன்பணம் திரும்பக் கொடுக்கப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறதாம்.