இயக்குனரும் நடிகை அமலா பாலின் முன்னாள் கணவருமான விஜய் சில வாரங்களுக்கு முன் மறுமணம் செய்துகொண்டார். இதையடுத்து தானும் மறுமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார் அமலாபால்.
“எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் பல வெற்றி, தோல்விகளைக் கடந்து வந்துள்ளேன். திருமணமுறிவுக்குப் பிறகு நான் தனித்து விடப்பட்டது போல் இருந்தது. அதிலிருந்து என்னை மீட்டெடுத்து பக்குவப்படுத்தியது நான் சென்ற இமயமலை பயணம்தான்.
“இப்போது எல்லாவற்றையும் ஒரேமாதிரி எடுத்துக்கொள்ளும் ஜென் மனநிலைக்கு வந்திருக்கிறேன். எல்லா பிரச்சினைகளையும் சந்திக்கும் துணிச்சல் வந்துள்ளது.
“என் சுதந்திரத்தையும் துணிச்சலையும் காட்டத்தான் ஆண்களைப் போல் கிராப் வைத்துக்கொண்டிருக்கிறேன். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்ததும் அப்படித்தான். ரம்யாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்ததுகூட, ஏன் கொடுக்கக்கூடாது என்ற கேள்வியில் பிறந்ததுதான். ‘மைனா’ படத்துக்குப் பிறகு என் மனதுக்கு நிறைவாக எந்த படமும் அமையவில்லை.
“ஆடை படம் மட்டுமே அமைந்துள்ளது. எனது சினிமா வாழ்க்கையில் ‘ஆடை’ மிக முக்கியமான படமாக இருக்கும். எனக்கு மறுமணத்தில் நம்பிக்கை இருக்கிறது. கட்டாயம் மறுமணம் செய்துகொள்வேன். குழந்தையும் பெற்றுக்கொள்வேன்.
“மேலும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பேன். எந்தவிதமான கட்டுப்பாட்டுக்குள்ளும் சிக்கா மல், நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்,” என்றார்.
இதற்கிடையே பாண்டிச்சேரியில் அமலா பால் தனது நண்பருடன் வசிப்பதாகக் கூறப்படுவது குறித்து தமிழக ஊடகம் ஒன்று கேட்ட கேள்விக்கு ஆவேசமாக பதில் அளித்த அவர், “நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார்.