‘காப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது திரையுலகத்தை மட்டுமல்லாது, அரசியல் தளத்திலும் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா தெரிவித்துள்ள கருத்தை தாம் ஆதரிப்பதாகக் கூறினார் ரஜினி.
சென்னையில் நடைபெற்ற இவ்விழாவில் படக்குழுவினரும் ரசிகர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். அப்போது, புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா தெரிவித்த கருத்தின் மூலம் அவரது இன்னொரு முகம் தெரிந்தது என்று ரஜினி குறிப்பிட்டார்.
“சூர்யா தெரிவித்த கருத்து பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டதாகத் தெரிகிறது.
“மாணவர்கள் படும் கஷ்டத்தை கண் எதிரே பார்த்தவர் சூர்யா. அதனால் மாணவ சமுதாயத்துக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். இன்றைய இளையர்கள் தமிழின் சிறப்பு குறித்து நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்,” என்றார் ரஜினி.
இந்நிலையில், ரஜினி குறிப்பிட்டவை என் நினைவில் என்றும் நீங்காமல் இருக்கும் என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிடைத்து வருகிறது.
அந்த வகையில், நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், தற்போது நாட்டில் நல்ல கருத்துகளைப் பேசுவதற்கு சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது என்றார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
“அதுபோலவே சூர்யாவுக்கும் நடந்துள்ளது. இருந்தாலும் இதுபோன்ற நல்ல கருத்துகளைத் தொடர்ந்து எல்லோரும் பேச வேண்டும்,” என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
இதற்கிடையே தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் சென்னையில் நடைபெற்றது. அப்போது வாக்களிக்க வந்த இயக்குநர் சங்கரிடம் சூர்யாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மழுப்பலாக பதிலளித்தார் சங்கர். எனினும், செய்தியாளர்கள் விடாமல் கேள்வி எழுப்பவே, சூர்யா என்ன பேசினார் என்பது தமக்குத் தெரியாது என்றும், அது குறித்து முழுமையாகத் தெரிந்து கொண்டு தமது கருத்தை தெரிவிப்பதாகவும் கூறிவிட்டு, வேகமாகப் புறப்பட்டுச் சென்றார்.
அவரது இந்த மழுப்பலும் நழுவலும் சீமானை கோபப்படுத்தி உள்ளது. சமூகப் பொறுப்புடன் படங்கள் எடுப்பதாக அனைவராலும் கருதப்பட்ட சங்கர், இவ்வாறு பதிலளிக்காமல் சென்றது மிகவும் தவறு என்று அவர் தெரிவித்துள்ளார்.