‘பிகில்’ படம் பலருக்குப் புது வாய்ப்புகளைத் தேடித் தந்திருக்கிறது. அவர்களில் வர்ஷாவும் ஒருவர்.
விஜய்யிடம் பயிற்சி பெறும் கால்பந்து வீராங்கனையாக ‘பிகில்’ படத்தில் நடித்துள்ள வர்ஷா ஏற்கெனவே ‘யானும் தீயவன்’, ‘96’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். நான்காண்டுகளாக கோடம்பாக்கத்தில் வலம் வந்தாலும் ‘பிகில்’ வெளியான பிறகே ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறார்.
‘96’ படத்தில் விஜய் சேதுபதியின் மாணவியாக நடித்திருந்தார் வர்ஷா. அந்தப் படம் வெளியான இரண்டாவது வாரத்திலேயே ‘பிகில்’ வாய்ப்பு தேடி வந்ததாம்.
“இயக்குநர் அட்லி சாரின் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு நேரில் வருமாறு கூறினர். அவரைச் சந்தித்தபோது ‘பிகில்’ கதை குறித்தோ, அதில் எனது கதாபாத்திரம் பற்றியோ அவர் ஏதும் பேசவில்லை.
“உங்களைப் பார்த்தால் ரொம்ப சாதுவாகத் தெரிகிறீர்கள். இது அதிரடியான படமாக இருக்கும். உங்களால் நடிக்க முடியுமா? என்று யோசித்துச் சொல்லுங்கள் என்றார்.
“வீடு திரும்பும்போது இது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன். வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை.
“அதே சமயம் விஜய் சார் நடிப்பில் அட்லி இயக்குகிறார் என்ற பிறகு அதிகம் யோசிக்க ஒன்றுமில்லை. நடிப்பதாக ஒப்புக்கொண்ட பிறகே கதையைச் சொன்னார் அட்லி,” என்கிறார் வர்ஷா.
‘பிகில்’ படத்தைப் பார்த்த பலரும் இவர் உண்மையாகவே கால்பந்து வீராங்கனையா? என்று கேட்கிறர்களாம். ஆனால், உண்மையில் இவருக்குக் கூடைப்பந்து விளையாட்டில்தான் ஆர்வமாம்.
“பள்ளியில் படிக்கும்போது பலரும் நான் கூடைப்பந்து விளையாடுவதை விமர்சித்தனர். என் உயரத்தை மனதில் வைத்துப் பேசியதால் வருத்தமாக இருந்தது. அதனால் கூடைப்பந்து விளையாடுவதையே நிறுத்தி விட்டேன். அதேசமயம் கால்பந்து குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால், இந்தப் படத்தில் நடித்து முடித்ததும் கால்பந்து தொடர்பான அனைத்தும் அத்துபடியாகிவிட்டது,” என்கிறார் வர்ஷா.
விஜய் குறித்து?
“அவரைத் திரைப்படங்களில் பார்த்ததோடு சரி, இப்போதுதான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கதைப்படி அவர் என் வீட்டுக்கு வந்து கால்பந்து விளையாட அழைக்கும் காட்சியைத்தான் முதலில் படமாக்கினர். அவருடன் சேர்ந்து நடிக்க பயமாக இருந்தது.
“அவர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தால் அனைவருமே சுறுசுப்பாகி விடுவார்கள். மேலும் அந்தச் சூழல் அமைதியானதாகவும் மாறிவிடும். அடிப்படையில் நான் அவரது தீவிர ரசிகை. இந்தப் படத்தில் நடித்தபோது அவரை ஒவ்வொரு அணுவாக ரசிக்க முடிந்தது.
“அதேபோல் நயன்தாராவும் மிக இனிமையானவர். எங்கள் குழுவில் நான் கொஞ்சம் துறுதுறுவென இருப்பேன். என்னைப் பார்த்தாலே அவருக்குச் சிரிப்பு வந்துவிடும். நானும் அவரும் இணைந்து நடித்த காட்சியில் நான் கச்சிதமாக நடிக்க அவர்தான் உதவியாக இருந்தார்.
“இயக்குநர் அட்லியைப் பொறுத்தவரை எப்போதுமே ஜாலியாக இருப்பார். படப்பிடிப்பு நடக்கும்போது பரபரப்பு இருந்தாலும் அவரது கலகலப்பு மாறாது. ஒரு காட்சி எடுத்து முடித்ததும் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது, சிறப்பாக நடித்திருக்கிறீர்கள் என்று மறக்காமல் பாராட்டுவார். அவரது இந்தப் பண்பு எனக்குப் பிடிக்கும். அவரது படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்,” என்று சொல்லும் வர்ஷா, தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம்.
அனைத்து முன்னணி நாயகர்களுடன் நடிக்கவேண்டும் என்பதே இவரது ஆசை. அதிலும் விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா ஆகிய இருவருடனும் நிச்சயமாக நடிக்க வேண்டும் என உறுதியாகச் சொல்கிறார்.
தற்போது தமிழ், தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் வர்ஷா.