‘ஹீரோ’ படத்தின் வசூல் நிலவரம் குறித்து பலவிதமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், இது குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். விமர்சனங்கள் குறித்து இப்போதெல்லாம் அதிகம் கவலைப்படுவதில்லை என்கிறது அவரது தரப்பு.
கடந்த காலங்களிலும் இதே விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார் சிவா. குறிப்பாக ‘ரெமோ’ படத்துக்குக் கிடைத்த விமர்சனம் அவரை மிகவும் காயப்படுத்தியது என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
இதை அடுத்து ‘மிஸ்டர் லோக்கல்’ படம் வெளியானபோதும் சிவா குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் ஆரோக்கியமான, நியாயமான விமர்சனங்களை மட்டுமே தான் கவனத்தில் கொள்வதாகச் சொல்கிறார் சிவா.
“‘ரெமோ’ குறித்துக் கடுமையாக விமர்சித்தவர்கள் ‘கனா’ படத்தின் வெற்றியையும் அதன் தரம் குறித்தும் அதிகம் கண்டுகொள்ளவில்லை. ரசிகர்கள் கொண்டாடிய அந்தப் படத்தைப் பற்றி விமர்சகர்கள் அதிகம் எழுதவில்லை.
“நேர்மையான சிலர் மட்டும் எனது படங்களில் உள்ள நல்ல, சாதகமான அம்சங்களை நடுநிலையோடு சுட்டிக் காட்டுகிறார்கள். மற்றவர்கள் எனது படங்களின் வெற்றி தோல்வி குறித்து ஒரே அளவில் விமர்சிக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்,” என்று ஆதங்கப்படுகிறார் சிவா.
இதுவரையிலான திரையுலகப் பயணத்தின் வழி தனக்குத்தானே அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளக்கூடாது என்பதை உணர்ந்திருப்பதாகச் சொல்கிறார்.
“நான் கொஞ்சம் உணர்வுபூர்வமானவன். அதிகம் உணர்ச்சி வசப்படுவதை மாற்றிக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
“என்னிடம் முன்வைக்கப்படும் யோசனைகளை உடனுக்குடன் நிராகரிக்காமல் அவற்றை உன்னிப்பாக ஆராய்கிறேன். அந்த ஐடியாவை வைத்து என்ன செய்யலாம் என யோசிக்கத் துவங்கி உள்ளேன்.
“குறிப்பிட்ட ஒரு கதை நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது, அந்தக் கதையை வைத்து நாம் எப்படி வளர்ச்சி காணலாம் என்பதை எல்லாம் தற்போது தீவிரமாக அலசிப் பார்க்கிறேன். இவை அனைத்துமே ரசிகர்களுடன் சம்பந்தப்பட்டவை. எனவே அவர்களை மதித்துச் செயல்படுவதுதான் நல்லது.
“இதுதான் சரி, இதுதான் தவறு என்று ரசிகர்கள் சொன்னால் அதை அப்படியே ஏற்க வேண்டும். அவர்கள் சுட்டிக்காட்டும் கதை பழைய புத்தகத்தில் இருக்கலாம். ஆனால், அதை ரசிகர்கள் கொண்டாட முடிவு செய்து விட்டால் அதுவே தீர்ப்பு,” என்று பக்குவமாகப் பேசுகிறார் சிவகார்த்திகேயன்.
தன்னைப் பற்றி சில தரப்பினர் உள்நோக்கத்துடன் விமர்சனங்களைப் பரப்பி வருவதாகக் குறிப்பிடுபவர் அத்தகைய விமர்சனங்களைக் கவனிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்கிறார்.
ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் புதிதாகச் செய்ய வேண்டும் எனும் ஆர்வம் தமக்கு இருப்பதாக குறிப்பிடுபவர், அந்த வகையில்தான் ‘ரெமோ’, ‘ஹீரோ’ போன்ற கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதாகச் சொல்கிறார்.