‘பட்டாஸ்’ படத்தின் வெளியீட்டை தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களை ஏற்றுள்ளார்.
தமிழர்களின் தற்காப்புக் கலைகளின் சிறப்பை எடுத்துக்கூறும் படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. துரை செந்தில்குமார் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘கொடி’யை இயக்கியவர்.
முதலில் ‘கிக்பாக்ஸிங்’ கலையை மையப்படுத்தியே கதை எழுதினாராம் துரை. அதிலும் தனுஷை மனதிற்கொண்டே எழுதியுள்ளார்.
எனினும் கிக்பாக்ஸிங் வெளிநாட்டில் இருந்து வந்த சண்டைக்கலை என்பதால் அதைக் கைவிட்டாராம். அதன்பிறகு தமிழர்களின் வீரக்கலைகள் குறித்த தகவல்களைத் தேடத் துவங்கியுள்ளார்.
“தமிழர்களின் தற்காப்புக் கலையின் ஜாம்பவான் என்றால் அது நாகர்கோவில் மாஸ்டர் செல்வராஜ்தான். அவரிடம்தான் தற்காப்புக் கலைக்கான பயிற்சியை மேற்கொண்டார் தனுஷ். அவரிடம் கற்றுக்கொண்டதுடன் சேர்த்து தனது பங்களிப்பையும் கலந்து படப்பிடிப்பில் நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்துவிட்டார் தனுஷ்.
“நான் இயக்குநர் வெற்றிமாறனிடம் பணியாற்றியவன். அப்போது முதலே தனுஷ் சாரைக் கூர்ந்து கவனிக்கிறேன். மறுநாள் எடுக்கப்போகும் காட்சிகளை மேலோட்டமாக இயக்குநர் வெற்றிமாறன் விவரிப்பார். அதைக் கேட்டுக்கொள்ளும் தனுஷ் மறுநாள் படப்பிடிப்பின்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் அசத்தலாக நடிப்பார். இதுதான் அவரிடம் உள்ள சிறப்பம்சம்,” என்று தனுஷ் புராணம் பாடுகிறார் துரை செந்தில்குமார்.
‘அசுரன்’ படத்தின் வெற்றியை அடுத்து ‘பட்டாஸ்’ குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இரட்டை வேடங்களில், ஒரு தனுஷ் அவரது இயல்புக்கு ஏற்ப ‘துறுதுறு’ இளையராக வலம் வருவாராம். மற்றொருவர் சீரியஸான தனுஷ். இரு கதாபாத்திரங்களிலும் எந்தக் குறையுமின்றி வெளுத்துக்கட்டியுள்ளார் என்று படக்குழுவினர் பாராட்டுகின்றனர்.
‘புதுப்பேட்டை’க்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் இணைந்துள்ளார் சினேகா. கதைப்படி, மெஹ்ரின் பிர்சடா தான் கதாநாயகி என்றாலும், படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை தனுஷுடன் பயணம் செய்யும் தரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் சினேகா.
அதுமட்டுமல்ல, தனுஷுக்கு அடுத்தபடியாக இவரும் செல்வராஜ் மாஸ்டரிடம் தற்காப்புக் கலை பயிற்சி எடுத்துக்கொண்டாராம்.
தமிழர்கள் தற்காப்புக் கலையில் எந்தளவு சிறந்தவர்கள்? அந்தக் கலையைப் பரப்புவதில் பெண்களின் பங்களிப்பு என்ன? என்பதை ‘பட்டாஸ்’ விரிவாக எடுத்துச் சொல்லப்போகிறது.
“வெற்றி மாறன் சாரிடம் ‘ஆடுகளம்’ படத்தில் வேலை பார்த்தபோது தனுஷ் சாருக்கென்று நான் எழுதி வைத்திருந்த கதைதான் ‘எதிர்நீச்சல்.’ அதை வெற்றி சாரிடம் சொல்லி வைத்திருந்தேன்.
“அப்போது தனுஷ் சாரோடு ‘3’ படத்தில் சிவகார்த்திகேயன் சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வெற்றி சாரிடம் தனது தயாரிப்பில் சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து படம் எடுக்கப்போவதாகக் கூறியுள்ளார்.
“இது பற்றி எனக்குத் தெரியாது. அதே சமயம் ‘யாரேனும் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள்’ என்று தனுஷ் கேட்டதாக எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து தான் வெற்றிமாறன் சாரிடம் நான் சொன்ன கதையை அவர் தனுஷிடம் கூறியுள்ளார்.
“அப்படிக் கிடைத்த வாய்ப்புதான் ‘எதிர்நீச்சல்’. சிவகார்த்திகேயனின் திறமையை முதலில் கண்டுபிடித்தவர் தனுஷ் சார்தான்.
“அதில் நடிக்கும்போதே சிவகார்த்திகேயனின் புத்திசாலித்தனம் அனைவருக்கும் தெரிந்துபோனது. அதையடுத்து தனது திறமைக்கேற்ற உயரங்களை சிவா அடைந்துள்ளார். தனுஷ் சார் தொடர்ந்து திறமைசாலிகளுக்கு வாய்ப்பு தருகிறார்.
“அவர் எனக்கும் வாய்ப்பு அளித்துள்ளார் என்பதை பெருமையாக கருதுகிறேன்,” என்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார்.