காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் நடிகை அபிநயா.
‘நாடோடிகள்’ படம் முலம் தமிழ் ரசிகர்களின் அன்பைப் பெற்ற அவர், அதன் தொடர்ச்சியாக மேலும் சில படங்களில் நடித்தார். கேட்கும் திறன், பேசும் திறன் இல்லாவிட்டாலும் நல்ல நடிகை என்று பெயரெடுத்துள்ளார்.
இந்நிலையில் தன்னைப் போன்ற குறைபாடுடைய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சைகை மொழி (Sign Language) கற்றுக்கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்தியாவில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 5 கோடிக்கும் அதிகமாம். அவர்களில் முக்கால்வாசி பேருக்கு சைகை மொழி தெரியாதாம். அதனால் வழக்கமான பணிகளைச் செய்வதும், தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதும் அவர்களுக்கு மிகச் சிரமமான விஷயமாக உள்ளது என்று கவலைப்படுகிறார் அபிநயா.
“எனக்கு இதுபோன்ற சங்கடங்களும் பிரச்சினைகளும் ஏற்படக்கூடாது என்பதால்தான் உலகின் எந்தப் பகுதியில் வசித்தாலும் கைகொடுக்கும் என்று நம்பி என் பெற்றோர் ஆங்கில வழிப் பள்ளியில் படிக்க வைத்தனர். வீட்டில் சைகை மொழியும் கற்றுக் கொடுத்தனர்.
“இந்த இரண்டு முயற்சிகளும் எனக்குப் பெரிய உதவியாக இருந்தது. அதேபோல் என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளின் பெற்றோரும் சைகை மொழியைக் கற்றுக்கொண்டு அதைத் தங்கள் குழந்தைகளுக்கும் கட்டாயமாகக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
“இதை நான் செல்லும் இடங்களில் எல்லாம், பார்க்கும் மனிதர்களிடம் எல்லாம் தீவிரமாக வலியுறுத்தி வருகிறேன். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்,” என்கிறார் அபிநயா.
தனக்காக தோழிகள் சிலரும் சைகை மொழியைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிடும் அபிநயா, இதனால் அவர்களுடன் உற்சாகமாகப் பேசி மகிழ முடிகிறது என்கிறார். பெற்றோர், தோழிகள் தன் நலனில் அக்கறை கொண்டவர்கள் எனப் பலருடனும் சைகை மொழியில் பேசுவதால் வாழ்வின் எந்தத் தருணத்திலும் தாம் தனித்துவிடப்பட்டதாக நினைக்கவே தோன்றியதில்லை என்கிறார்.
அவ்வப்போது மாற்றுத்திறன் குழந்தைகளை நேரில் சந்தித்து சைகை மொழியில் உரையாடி மகிழ்வதும் இவரது வழக்கமாக உள்ளது. கேட்கும் திறன், பேசும் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் படிக்கும் பள்ளியில் சைகை மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் அபிநயா.
தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள பள்ளி நிர்வாகங்களிடம் இந்த நல்ல விஷயத்தை வலியுறுத்தி வருகிறாராம்.
“நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் நலன் சார்ந்து செயல்படும் நபர்களுடன் நட்பில் இருக்கிறேன். நாங்கள் ஆக்கபூர்வமான முயற்சிகள் நடக்க தொடர்ந்து திட்டமிடுகிறோம். அந்த வகையில்தான் என்னுடைய இந்த முன்னெடுப்பும் தொடங்கியது,” என்கிறார் அபிநயா.