‘அசுரன்’ படத்தின் இமாலய வெற்றியானது இயக்குநர் வெற்றிமாறன், தனுஷ் தரப்பை வெகுவாக உற்சாகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்துள்ளது.
இதையடுத்து சென்னையில் 100ஆவது நாள் விழாவை விமரிசையாக நடத்தி உள்ளனர். இந்நிகழ்வில் பேசிய தனுஷ், தமக்கும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் தயாரிப்பாளர் தாணு முழு சுதந்திரம் அளித்தார் என்றும், அதுதான் ‘அசுரன்’ தரமான படைப்பாக உருவாக காரணம் என்றும் குறிப்பிட்டார்.
“எனக்கு அவ்வப்போது சில இக்கட்டான சூழ்நிலைகள் உருவாகும். அந்தச் சமயங்களில் எல்லாம் தாணு சார் எனக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளார். அவற்றையெல்லாம் மறக்கவே மாட்டேன்.
“இந்தப் படத்தின் வெற்றிக்கு நானும் வெற்றிமாறனும் மட்டுமே உரிமை கொண்டாட மாட்டோம். இதில் 25 விழுக்காட்டை ஜி.வி. பிரகாஷுக்கு ஒதுக்க வேண்டும். காரணம், ‘வா அசுரா வா’ என்ற ஒரு பாடல் இந்தப் படத்தின் வெற்றியை முன்பே தீர்மானித்துவிட்டது,” என்றார் தனுஷ்.
‘அசுரன்’ முதல் பிரதி தயாரானபோது லண்டனில் இருந்தாராம். அதனால் படம் எப்படி வந்திருக்கிறது என்பதைத் தம்மால் பார்க்க முடியவில்லை என்றார். இருப்பினும் முதன்முறையாக படம் பார்த்தபோது தொடக்க காட்சியாக ‘வா அசுரா வா’ பாடல் இடம்பெற்றிருப்பதைக் கண்டபோது ‘ஜிவ்’வென்று இருந்ததாகக் குறிப்பிட்டார்.
“வெற்றிமாறன் எல்லாத் திறமைகளும் கொண்டவர். ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தின் படப்பிடிப்பின்போது பெற்ற தாயை நினைத்து கதறி அழுவது போன்று ஒரு காட்சி இருந்தது. அதில் நடிக்கும்போது எனக்கு 20 வயதுதான் ஆகியிருந்தது. யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதுகூட தெரியாது.
“அப்போது பாலு மகேந்திரா சாரிடம், ‘ஒரே ஒருமுறை வெற்றிமாறன் சாரை நடித்துக் காட்டச் சொல்லுங்கள். அதை நான் பின்பற்றுகிறேன்’ என்றேன். பொதுவாக இப்படிச் சொன்னால் உதவி இயக்குநர்கள் அதிர்ச்சி அடைவார்கள். அதை மனதிற்கொண்டு வெற்றிமாறனைக் கலாட்டா செய்ய வேண்டும் என்பதற்காக அப்படிச் சொன்னேன்.
“ஆனால் வெற்றிமாறன் உடனே தன் கையில் இருந்த பேடைக் கீழே போட்டுவிட்டு எனக்கான இடத்தில் போய் உட்கார்ந்தார். அதன்பிறகு உருண்டு புரண்டு படுத்து எழுந்து அழுதபடியே நடித்துக் காட்டினார். எல்லோரும் அசந்துவிட்டோம்.
“அதன் பிறகு பாலு சாரிடம் சென்று இரண்டு பேரில் யாருடைய நடிப்பு பிடித்திருந்தது என்று கேட்டேன். அதற்கு சிரித்துக்கொண்டே பிள்ளைகளில் எது சிறந்தது என்று கேட்டால், பதிலளிக்க முடியாது என்றார் பாலு சார். எங்கள் இருவரையும் அவர் சகோதரர்களாகத்தான் பார்த்தார். அன்று முதல் இன்று வரை சகோதரர்களாகத்தான் வலம் வருகிறோம்,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் தனுஷ்.
இதற்கிடையே இந்தப் படத்தைப் பார்த்த ரஜினி தனுஷ் நடிப்பை வெகுவாகப் பாராட்டினாராம். குறிப்பிட்ட ஒரு காட்சியில் தனுஷ் தன் ஊரில் இருப்பவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார்.
இந்தக் காட்சியைப் பார்த்த ரஜினி ‘இந்தக் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்க வேண்டும்’ என்று தயாரிப்பாளர் தாணுவிடம் சொன்னாராம்.
“இரவு, பகல் பாராமல் உழைத்த உழைப்பிற்கு, என் கண்கள் பனித்த வெற்றியை அவருக்கு காணிக்கையாக்குகிறேன். காலம் காலமாக என் நன்றியை நிரூபித்துக்கொண்டே இருப்பேன்.
“தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி தொடர் வெற்றிகளை ஈட்டிய நல்ல கூட்டணி.
“தம்பி தனுஷ் ஒரு கடினமான உழைப்பாளி. சிவாஜி சார் உயிரோடு இருந்திருந்தால் அவரைத் தான் இந்த மேடையில் உட்கார வைத்திருப்பேன்.
“இன்று உலகமே தனுஷின் நடிப்பைப் பாராட்டிவிட்டது. நடிகர் திலகத்துக்குப் பிறகு நான் பார்த்து வியந்த ஒரே நடிகர் தனுஷ் தான். இதை ரஜினி சாரிடம் கூட சொல்லியிருக்கேன். தனுஷ் இன்னும் பல உயரங்களை எட்டிப் பிடிப்பார்,” என்றார் தயாரிப்பாளர் தாணு.