தந்தையின் மரணம் அமலாபாலை வெகுவாக அசைத்துப் பார்த்திருக்கிறது. சோகத்தை மறைத்து அடுத்தகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது தந்தையின் மறைவு, தாயாரின் தற்போதைய நிலை, சகோதரர் அளித்து வரும் ஆதரவு எனப் பல்வேறு விஷயங்களை விவரித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அமலாவின் தந்தை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அண்மையில் காலமானார். அச்சமயம் மும்பையில் படப்பிடிப்பில் இருந்தாராம் அமலா. அவசரமாக ஊர் திரும்பி இறுதிச் சடங்குகளை குடும்பத்தாருடன் சேர்ந்து முடித்தவர் இப்போது வழக்கமான பணிக்குத் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் பெற்றோரில் ஒருவரை இழக்கும் உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என தமது சமூக வலைத்தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அது ஒரு பெரிய வீழ்ச்சி. தெரியாத ஓர் இருளுக்குள் செல்ல ஆரம்பித்துவிடுவீர்கள். வெவ்வேறு வகையான உணர்ச்சிகளை உணரத் துவங்குவீர்கள். என் தந்தையைப் புற்றுநோய்க்குப் பலி கொடுத்தது வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணத்தைக் காண வித்திட்டது. பல விஷயங்களை உணரச் செய்தது. இதோ அதில் ஒரு சிந்தனை,” என்று குறிப்பிட்டுள்ளார் அமலாபால்.
நாம் அனைவரும் அழகான பெரிய உலகத்தில் வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இன்பமும் துன்பமும் இருப்பதைப் போல் மனிதர்களின் ஒவ்வோர் அசைவையும் சிந்தனையையும் ஆதிக்கம் செலுத்த நினைக்கும், சமூக நெறிகளால் உருவாக்கப்பட்ட மற்றொரு உலகிலும் நாம் வாழ்வதாகத் தெரிவித்துள்ளார்.
நம்மில் பலர் இளம் வயதிலிருந்தே கட்டுப்படுத்தப் படுவதாகவும் நமக்கு நிகழும் மோசமான அனுபவங்களை மறைத்துக்கொண்டு வாழ்வதாகவும் அமலாபால் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு மனிதரும் தமக்குள் இருக்கும் குழந்தையை, குழந்தைத் தன்மையைப் பூட்டி வைப்பதாக அவர் கூறியுள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக முந்திச் செல்லும் வாழ்க்கைப் பந்தயத்தில் நம் மீது நாமே எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. இந்தச் சூட்சமம் நமக்கு சொல்லித் தரப்படுவதில்லை.
“நமக்குள் இருக்கும் அந்தப் பெட்டிகளைத் திறந்து, அதில் அதிர்ச்சியால் கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைத்தனத்தைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். ஓர் உறவிலிருந்து மற்றோர் உறவுக்குத் தாவுகிறோம். நல்ல துணைக்கு ஏங்குகிறோம். நமக்குள் காணாமல் போயிருக்கும் அந்த இன்னொரு பாதியை மற்றவர்களிடத்தில், பொருட்களில், தொழிலில், தற்காலிக மகிழ்ச்சியில், அனுபவங்களில் தேடுகிறோம்,” என்கிறார் அமலாபால்.
இவை அனைத்தும் ஒருவர் தனது சுயத்தில் இருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் என்று குறிப்பிட்டுள்ள அவர், இவற்றின் முடிவில் வெறுமையை மட்டுமே உணரமுடியும் என்றும் கூறுகிறார்.
நமக்குள் இருக்கும் இருள், வெளிச்சம், நன்மை, தீமை, சோகம், மகிழ்ச்சி, வெறுமை, பலவீனம், வலி, அச்சம் அனைத்தையும் எப்போது ஏற்றுக்கொள்ளப்போகிறோம் என்றும் எப்போது நம்மை நாமே முழுமையாக நேசிக்கப் போகிறோம் என்றும் அமலாபால் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது இத்தகைய கேள்விகளையும் அனுபவங்களையும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள தீர்மானித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதிகம் பயணப்படாத பாதையில் நடக்க தாம் முடிவெடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இனி இதிலிருந்து தப்பித்துச் செல்லும் எண்ணமும் தமக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நானும் என் அம்மாவும் மன அழுத்தத்துக்கு கிட்டத்தட்ட எங்களை இழந்துவிட்டோம். ஆனால் இதோ இப்போது ஃபீனிக்ஸ் பறவை போலத் தயாராகி இருக்கிறோம்.
“தொடர்ந்து என்னை ஆதரித்து வரும் அன்பு சகோதரனுக்கு நன்றி. எனது சிறு வயது அதிர்ச்சிகரமான அனுபவங்களைச் சுவாரசியமானதாக மாற்றியதற்கும் தொடர்ந்து இன்றும் அதைச் செய்து வருவதற்கும் நன்றி.
“உடைந்த இதயங்கள் அனைத்துக்கும் நிறைய அன்பைத் தருகிறேன்,” என அமலாபால் தெரிவித்துள்ளார்.