கொரோனா கிருமி பாதிப்பால் பல்வேறு துறைகளும் முடங்கிப் போயுள்ளன. அதில் மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்குத் துறையான சினிமாவும் ஒன்று.
திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் நடிகர்கள் முதல் அதில் பணியாற்றும் ஊழியர்கள் வரை அத்தனை பேரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இதையடுத்து கோலிவுட், பாலிவுட் திரைப்பிரபலங்கள் பலரும் தாங்கள் வீட்டில் அன்றாடம் செய்யும் சின்னசின்ன வேலைகளையும் கூட சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருசில தமிழ்ப் பிரபலங்களைத் திரைச்செய்தி ஊடகங்கள் தொடர்புகொண்டு பேசியபோது, அவர்கள் பல தகவல்களையும் பகிர்ந்துகொண்டதுடன் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.
காந்தக் கண்ணழகி அதுல்யா ரவி(படம்) கூறுகையில், “என் சொந்த ஊர் கோவை. திரைத்தொழிலே என் எதிர்கால வாழ்க்கை என முடிவெடுத்து விட்டதால் சென்னையில் வீடு எடுத்து தங்கியுள்ளேன். அப்பா, அம்மா, தம்பி என எல்லோரும் ஒன்றாகத்தான் உள்ளோம்.
“இப்போது அதிக நேரம் இருப்பதால் நிறைய படம் பார்க்கிறேன். இரவு தாமதமாகத் தூங்கி, மறுநாள் மதியம்தான் எழுகிறேன்.
“வீட்டில் தினமும் ஒவ்வொரு அறையாக சுத்தம் செய்து வருகிறேன். அவ்வப்போது அம்மா உணவு சமைக்கும்போது உதவுகிறேன்.
“நான் ஒரு சாப்பாட்டு பிரியை. நேரம் கிடைப்பதால் நிறைய சாப்பிடுகிறேன். இனி தினமும் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய உள்ளேன். வீட்டைவிட்டு வெளியில் போகாமல் இருப்பதுதான் பெரும் சிரமமாக உள்ளது,” என்கிறார்.
நம்மைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசரமான காலகட்டத்தில் இருக்கிறோம் என்று கூறிய நடிகர் பிரசாந்த், “நான் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சில குழுக்களை ஏற்படுத்தி எங்களால் முடிந்த சின்ன சின்ன விஷயங்களை முடியாதவர்களுக்கு செய்துகொடுத்து வருகிறேன். வீட்டிலேயே உடற்பயிற்சி செய்கிறேன். எப்போதும் ேபால் எல்லா மொழிப் படங்களையும் பார்த்து வருகிறேன். மக்கள் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறேன்,” என்கிறார்.
“இந்த விடுமுறை பல பேருக்கு பலவிதமான பாடங்களை சொல்லித் தந்துள்ளது என்று கூறும் கருணாகரன், “குறிப்பாக எனக்குள் நிறைய மாற்றங்களைத் தந்துள்ளது. செடிக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன், வீட்டை சுத்தம் செய்கிறேன்.
“குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்கிறேன். சிறிய தூக்கம் போடுவேன். பூப்பந்து விளையாடுவேன். படம் பார்க்கிறேன். ஒரு மலையாளப் படத்தில் நடிக்க உள்ளதால் அந்த மொழியைக் கற்றுவருகிறேன்,” என்கிறார்.
பெங்களூரில் இருப்பதாகக் கூறும் கிேஷார், “இங்கு எனக்கு விவசாய நிலம் உள்ளது. திணை, கம்பு பயிரிட்டுள்ளேன். காய்கறி, பழங்களும் நட்டுள்ளேன். என்னால் சும்மா இருக்கமுடியாது, குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு தோட்ட வேலைகளையும் கவனித்துவருகிறேன்,” என்கிறார்.
கேரளாவில் உள்ள அஜ்மல் பேசியபோது, “கொரோனா பயத்தால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. மின்னஞ்சல் வழி சில படங்களுக்குக் கதை கேட்டுள்ளேன். விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாராவுடன் நெற்றிக்கண் படத்தில் நடித்து வந்த கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு நின்றுவிட்டது. இதுதவிர இன்னும் ஒரு தமிழ்ப் படத்திலும் நடிக்கிறேன். மலையாளத்தில் சில படங்களில் நடிக்க கதை கேட்டுள்ளேன். வீட்டிலேயே உடற்பயிற்சி செய்கிறேன்,” என்றார்.
ஸ்ரீகாந்த் கூறுகையில் “புதிய இயக்குநர்கள் மின்னஞ்சலில் கதை அனுப்பி உள்ளனர். அதைப் படித்து வருகிறேன். நிறைய இணைய நாடகங்களைப் பார்க்கிறேன்.
“இப்போது உள்ள சூழலில் நாம் யார் வீட்டிற்கும் போகமுடியாது, பிறரும் நம் வீட்டிற்கு வரமுடியாது.
“வீட்டிலேயே உடற்பயிற்சிக் கூடம் வைத்துள்ளேன். உடலளவிலும் மனதளவிலும் நாம் கட்டுக்கோப்பாக இருக்கவேண்டிய காலம் இது. எனது பலமே என் மனைவிதான். எனக்காக பல நாட்கள் வெளியில் போகாமல் இருந்துள்ளார். அவர்தான் என் உந்துசக்தி,” என்கிறார் ஸ்ரீகாந்த்.