திரை நட்சத்திரங்கள் பலரும் கொரோனா விவகாரத்தால் வீட்டில் முடங்கி இருந்தாலும் அவ்வப்போது கைபேசியில் சில காணொளிகளை எடுத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் சாந்தனு தன் மனைவி கீர்த்தியுடன் இணைந்து வீட்டில் இருந்தபடியே ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ என்ற குறும்படத்தை உருவாக்கி உள்ளார்.
அதில் காலை தூங்கி எழுந்தது முதல் அனைத்து வீட்டு வேலைகளையும் சாந்தனுவே செய்கிறார்.
சமைப்பது, துணி துவைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது என்று பம்பரமாகச் சுழல்பவர், மதிய உணவுக்கு தயிர்சாதம், ஊறுகாய் தயார் செய்வதாக கூற, அதற்கு கீர்த்தி, தனக்கு உருளைக்கிழங்கு பொரியல் வேண்டும் என்கிறார்.
சாந்தனு அதையும் தயாரிக்கிறார். பிறகு அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ஓய்வு எடுக்கும்போது தமக்கு தேநீர் வேண்டும் என்கிறார் கீர்த்தி.
இந்நிலையில் சட்டென தூக்கத்தில் இருந்து சாந்தனு எழுகிறார். அப்போது தான் அனைத்தும் கனவு என்று அவருக்குப் புரிகிறது.
எனினும் வீட்டுப் பெண்களின் வேலையை ஒரு நாள் செய்வதற்கே இவ்வளவு சிரமம் என்றால், ஊரடங்கின்போது அவர்கள் எந்தளவு சிரமப்படுவார்கள் என்று கேள்வி எழுப்பும் சாந்தனு, வீட்டு வேலைகளில் ஆண்களும் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
இந்த குறும்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.