பல்வேறு எதிர்ப்புகள், சலசலப்புகளைக் கடந்து வெற்றிகரமாக நேரடியாக இணையத்தில் வெளியாகிறது ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம்.
திரையரங்குகளைத் தவிர்த்து இவ்வாறு வெளியிடுவதற்கு கொரோனா கிருமித் தொற்று விவகாரம் மட்டுமே காரணம் என்கிறது படத் தயாரிப்புக் குழு. இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு எதிர்பார்த்ததைவிட பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதனால் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.
இப்படத்தில் ஜோதிகாவின் பெயர் ‘வெண்பா’ என்றும் அவர் அமர்வு நீதிமன்ற வழக்கறிஞராக நடித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
“முன்பு காவல்துறை அதிகாரியாக நடித்தபோது மனதில் ஒருவித தைரியம், மிடுக்கு, கம்பீரம் ஆகியவற்றை உணர முடிந்தது எனில், வழக்கறிஞர் உடையை அணிந்தபோது அந்த உணர்வுகள் இருமடங்காக இருந்தன. ஒரு வலுவான பெண்மணியாக என்னை உணர்ந்தேன்.
“அதேசமயம் வழக்கறிஞராக நடிக்கும்போது சண்டைக்காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஏமாற்ற முடியாது. பெரிய வசனங்களைப் பேசி நடிக்கவேண்டும். நாம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்கான வசனங்களின் பலம், வீரியம் குறைந்துவிடக்கூடாது.
“அதிலும் எனக்கெதிரே நடிப்பவர் பார்த்திபன் சார். அவருடைய தமிழும் நடிப்பும் எப்படிப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் மூன்று, நான்கு பக்கங்கள் உள்ள நீளமான வசனங்களை நன்கு மனப்பாடம் செய்து நடித்தேன்.
“ஒருவகையில் இயக்குநர் ஃபிரெட்ரிக்குக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் முழு வசனங்களையும் என்னிடம் ஒப்படைத்து விட்டார்.
“அதனால் ஒவ்வொரு வசனத்தையும் நன்கு உள்வாங்கிக் கொண்டு கதையை உணர்ந்து நடிக்க முடிந்தது,” என்று சொல்லும் ஜோதிகா, தாம் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக உழைப்பைக் கொட்டியது இந்தப் படத்துக்குத்தான் என்கிறார்.
காரணம், ‘பொன்மகள் வந்தாள்’ கதை இவரது மனதுக்கு நெருக்கமான ஒன்றாக அமைந்துவிட்டதாம்.
இந்தப் படத்தில் பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் என ஐந்து இயக்குநர்களுடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவம் என்று குறிப்பிடுபவர், இந்த அனுபவசாலிகளிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்.
“இவர்கள் ஐந்து பேரும் எப்படி கதாபாத்திரத்துக்கு ஏற்ப தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள், நீளமான வசனங்களை எப்படி எளிதாக கையாள்கிறார்கள், வார்த்தைகளை எப்படி உச்சரிக்கிறார்கள் என பலவற்றை நேரடியாகப் பார்த்து தெரிந்துகொண்டேன்.
“சக நடிகைகளான ரேவதி, ஊர்வசி போன்றவர்களிடம் சிலவற்றைக் கற்றுக்கொண்டது போல் இந்த இயக்குநர்களிடமும் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருந்தன,” என்று சொல்லும் ஜோதிகா, ‘சந்திரமுகி’ இரண்டாம் பாகம் உருவாகும் பட்சத்தில் அதில் நாயகியாக நடிக்க சிம்ரன் பொருத்தமானவராக இருப்பார் என்கிறார்.
“நான் ஒரு வட இந்தியப் பெண் என்பதை யாருமே நினைவில் வைத்துக்கொள்வதில்லை. எனக்கான கதாபாத்திரத்துக்கு நீளமான வசனங்களை எழுதிவிடுகிறார்கள்.
“‘பொன்மகள் வந்தாள்’ படப்பிடிப்பில் தினமும் இயக்குநர் ஃபிரெட்ரிக் கையில் 35 பக்கம் கொண்ட புத்தகத்தைப் பார்க்க முடியும்.
“காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஏதேனும் இரண்டு பாத்திரங்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
“அவரும் அலுக்காமல் அக்காட்சிகளைப் படமாக்குவார்.
“நாங்கள் அவ்வளவு வசனங்கள் பேசியிருக்கிறோம்.
“பாக்யராஜ் சார் பார்த்திபன் சார் இருவரும் ஒருமுறை படித்துவிட்டு வசனத்தைப் பேசி விடுவார்கள்.
“ஆனால் எனக்கு அவ்வாறு பேசி நடிக்க மூன்று மாதங்கள் தேவைப்பட்டன,” என்று சொல்லும் ஜோதிகா, இப்போது எல்லாம் வணிக அம்சங்கள் மட்டுமே கொண்ட கதைகளில் நடிக்க விருப்பமில்லை என்கிறார்.
ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடுவதிலும் அல்லது கதாநாயகனைச் சுற்றி வருவதிலும் ஆர்வம் குறைந்துவிட்டதாம்.