கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திரைஉலகத்தினர் பல்வேறு வகைகளில் நிவாரண நிதி திரட்டி வருகின்றனர்.
மேலும் தங்கள் பங்குக்குத் தனிப்பட்ட வகையிலும் நிதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை நித்யா மேனன் தாம் உடுத்திய ஆடைகளை ஏலம் விடப்போகிறாராம். அதன்மூலம் கிடைக்கும் தொகையை, கொரோனா நிவாரண நிதிக்காக அளிப்பது இவரது திட்டம்.
‘மெர்சல்’, ‘24’, ‘சைக்கோ’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கும் நித்யா, சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்வில் (ஃபேஷன் ஷோ) பங்கேற்றார்.
அது தொடர்பாக பலரும் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் தாம் உடுத்திய உடையைத்தான் தற்போது ஏலம் விடப் போகிறாராம்.
இது சாதாரண உடைஅல்லவாம். பிரபல ஆடை வடிவமைப்பாளர் பல மாதங்கள் யோசித்து உருவாக்கிய உடையாம்.
“இந்த உடையை ஏலத்திற்கு கொடுக்கலாம் என்ற எண்ணம் மனதில் தோன்றியதும் நெருக்கமான சிலரிடம் இதுகுறித்து தெரிவித்தேன். இது நல்ல யோசனை என்று அவர்களும் ஊக்கம் தந்தனர்.
“நான் ஒன்றும் உலகறிந்த ஒரு பிரபல நடிகை அல்ல. அதனால் பெரும்தொகை திரளும் என எதிர்பார்க்கவில்லை.
“ஆனால் எந்தத் தொகை கிடைத்தாலும் 100 விழுக்காடு அறக்கட்டளைக்குத்தான் செல்லும். அந்த அறக்கட்டளை நிர்வாகிகள் கிராமப்புறங்களில் கொரோனா கிருமி விவகாரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களுக்கு உதவி செய்வர்.
“ஏழைகளுக்குப் பண உதவி செய்து, மீண்டும் அவர்கள் சொந்தக்காலில் நிற்க வழி செய்வர்.
“வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் ஆதரவற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டும்,” என்று சொல்லும் நித்யா மேனன், தனது இந்த உடைகளை ஏலம் விடும் நிகழ்வு குறித்து பரவலாக பலருக்கும் தெரியப்படுத்தி வருகிறாராம்.
முன்பு பங்கேற்ற அந்த ‘ஃபேஷன் ஷோ’ குறித்தும் அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அதிகமானோரை இந்த விவரம் சென்றடைந்தால் தனது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறாராம்.
“அக்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் நான் உடுத்திய ஆடை எனக்காக என்றே சிறப்பாக உருவாக்கப்பட்டது. ‘ரேம்ப் வாக்’ செய்வதற்காகத்தான் இந்த உடையைத் தயார் செய்யும்படி கேட்டிருந்தேன்.
“அந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் ஏற்கெனவே இன்ஸ்டகிராமில் வெளியிடப்பட்டன. அதை எனது தீவிர ரசிகர்கள் பார்த்திருக்கக்கூடும்,” என்கிறார் நித்யா.
இந்த சிறப்புமிக்க இந்த ஆடையை வடிவமைத்தவர் இவரது தோழி காவேரி. அவர் மிக அழகான இயற்கையாகத் தெரியும் ஆடைகளைத் தயாரிப்பதில் கைதேர்ந்தவராம்.
“என்னைப் போன்று மேலும் பல திரையுலகப் பிரபலங்கள் நிதி திரட்ட முன்வந்தால் மகிழ்வேன்.
“அவர்களுடன் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளேன். ஏழைகளின் பிரச்சினைகள் முடிவுக்கு வந்தால் போதும்,” என்கிறார் நித்யா மேனன்.