இயற்கை தான் எல்லோரையும்விட பெரியது என்பதை கொரோனா கிருமி தெளிவாக உணர்த்திவிட்டது என்கிறார் இயக்குநர் ரமணா.
இந்தப் பாடத்தை யாரும் மறக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜய் ரசிகர்களால் ரமணாவை அவ்வளவு எளிதில் மறந்துவிட இயலாது. காரணம், இவர் இயக்கிய ‘திருமலை’ படத்துக்குப் பிறகுதான் விஜய்யை அனைவரும் ஆக்ஷன் நாயகனாகப் பார்க்கத் துவங்கினர்.
அதையடுத்து மீண்டும் விஜய்யை வைத்து ‘ஆதி’; தனுஷ் நடிப்பில் ‘சுள்ளான்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கினார்.
அந்தச் சமயத்தில் திடீரென கடும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முடங்கினார் ரமணா. எனினும் அவர் போராட்டத்தைக் கைவிடவில்லை. இரண்டு ஆண்டுகள் தன்னம்பிக்கையுடன் போராடி நோயிலிருந்து மீண்டார்.
தாம் எதிர்கொண்ட புற்றுநோய்க்கு எதிரான போரில் வெற்றி கண்டவருக்கு இந்த கொரோனா ஊரடங்கு எத்தகைய அனுபவத்தை தந்தது என்பதை அவர் சொல்லக் கேட்போம்.
“ஒரு மனிதனுக்கு என்னதான் உண்மையான தேவை? காரில் போவது, ஆடம்பர உணவகத்துக்குப் போய் சாப்பிடுவது, ஆடைகள் வாங்குவது, மால்களுக்குச் செல்வது என்பவைதான் மனிதனுக்கு முன்பு வேண்டியதாக இருந்தது.
“ஆனால், இருப்பதைத் தக்க வைத்திருப்பதே சிறப்பு என்பதை இந்த ஊரடங்கு உணர்த்திவிட்டது. இந்த ஊரடங்கு விரும்பியோ விரும்பாமலோ எல்லோரையும் சமத்துவப்படுத்திவிட்டது.
“காலையில் மூன்று இட்லி, மதியம் கொஞ்சம் சாம்பார் சாதம், ஒரு கூட்டு என நிறுத்திவிட்டது. குடும்பம் சாந்தமாகிவிட்ட புரிதல் நடந்திருக்கிறது.
“வாழ்வதற்கான செலவு குறைவுதான். அடுத்தவர் மாதிரி வாழ்வதற்கான செலவுதான் அதிகம் எனப் புரிந்துவிட்டது. நம் குழந்தைகள் இந்த 50 நாட்களில் வாழ்வியல் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
“தூக்கி தலைமேல் வைத்து செல்லம் கொடுத்து வளர்த்த குழந்தைகளுக்கு நடப்பு புரிந்திருக்கிறது. மனிதத்தன்மை வெளிவருகிறது. ஆண்கள் ஐம்பது நாட்களுக்கு மேல் பெண்களின் தாலியறுத்து குடிக்காமல் இருந்தார்கள்.
“இனிமேல் சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் மட்டுமே நம்மைப் பாதுகாக்கும். சுயசிந்தனை, சுயபரிசோதனை இருந்தால் மட்டுமே இனி உயிர்த்திருக்க முடியும். இனி யாரும் எதற்கும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது.
“இந்த சமயம் இயற்கை தன்னை புதுப்பித்துக் கொள்கிற நேரம். நாம் இப்போது நாம் அனைவரும் எளிமை நோக்கி நகர வேண்டும்,” என்கிறார் ரமணா.