ஐஸ்வர்யா ராஜேஷ் பல்வேறு போராட்டங்களைக் கடந்து திரையுலகில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர். அண்மையில் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், தன் வாழ்க்கையில் நடந்த பல்வேறு உருக்கமான நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அவை மாணவர்களைக் கண்கலங்க வைத்ததாம். இனி அவர் பேசியதைக் கேட்போம்.
“என்னுடைய பயணம் என்பது வழக்கமான ஒன்றல்ல. வலி, வெற்றி, மகிழ்ச்சி என எல்லாமும் கலந்த கலவை. சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு மூன்று அண்ணன்கள். எட்டு வயதானபோது அப்பா இறந்துவிட்டார். பிறகு அம்மாதான் எங்களுக்கு அப்பாவாகவும் இருந்து பார்த்துக்கொண்டார். மும்பை சென்று புடவைகள் வாங்கிவந்து அவற்றைச் சென்னையில் விற்றார். ஆயுள்காப்பீட்டு முகவராகவும் வேலை பார்த்திருக்கிறார்.
“எனக்கு 12 வயதாகும்போது பெரிய அண்ணனும் திடீரென இறந்து போனார். அந்த சோகத்தில் இருந்து அம்மாவை மீட்டெடுக்க மிகவும் சிரமப்பட்டோம். அம்மா மிகச்சிறந்த போராளி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான் இன்று நடிகையாக உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம்.
“இரண்டாவது அண்ணன் படிப்பை முடித்த பிறகு வேலைக்குச் சென்றதும் அம்மாவுக்கு அப்படியொரு மகிழ்ச்சி. குடும்பத்தைக் கரைசேர்த்துவிடலாம் என்று அவர் நிம்மதியாக இருந்த நேரத்தில்தான் ஒரு சாலை விபத்தில் அவரும் இறந்துபோனார். அப்போதுதான் குடும்பத்துக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
“மார்க்கெட்டிங் வேலையில் சேர்ந்தேன். பிறகு பிறந்தநாள், திருமண நாள் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு அறிவிப்புகள் செய்வது, விருந்தினர்களை உபசரிப்பது எனப் பணியாற்றியதில் கொஞ்சம் பணம் கிடைத்தது. அடுத்து தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தேன். நாள்தோறும் 1,500 ரூபாய் தந்தனர். அதிகம் சம்பாதிக்க வேண்டும் என அம்மாவிடம் புலம்பியபோது அவர்தான் சினிமாவில் நடிக்கலாமே என்று முதன்முதலாக ஆலோசனை சொன்னார்.
“இதற்கிடையில் நடனம் கற்றுக்கொண்டு ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றேன். அதை வைத்து சினிமா வாய்ப்பு தேடியபோது ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் சரியாகப் போகவில்லை. என் திரைப்பயணத்தில் பாலியல் தொந்தரவுகள் மட்டுமல்ல, எனது தோற்றம், நிறம், அழகு என்று பலவற்றைப் பற்றிய மோசமான விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளேன்.
“சில இயக்குநர்கள் கதாநாயகிக்குரிய அம்சங்கள் என்னிடம் இல்லை என வெளிப்படையாக என்னிடமே கூறியிருக்கிறார்கள். பிறகு ‘அட்டகத்தி’ அமுதா கதாபாத்திரம் ஓரளவு பெயர் வாங்கிக் கொடுத்தது. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ரம்மி’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தேன். ‘காக்கா முட்டை’ படம்தான் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. அதன் இயக்குநர் மணிகண்டன்தான் எனக்கு நடிக்க கற்றுக் கொடுத்தார்.
“ஆனால் அந்தப் படம் வெளியானபிறகு பாராட்டுகள் குவிந்தனவே தவிர, அடுத்த ஓராண்டுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. ‘வடசென்னை’யில் தனுஷ், ‘தர்மதுரை’யில் விஜய் சேதுபதி என்று ஒருசிலர்தான் என் திறமையை மதித்து வாய்ப்பு தந்தனர். பெரிய நாயகர்களுடன் நடிக்க வாய்ப்பு வரவில்லை என்றாலும் நாமே ஏன் ஒரு படத்தின் நாயகனாக இருக்கக்கூடாது என்று தோன்றியது. அதுதான் ‘கனா’.
“கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கிரிக்கெட் பயிற்சி பெற்றேன். அந்தப் படம் மற்றொரு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது நாயகியை மையப்படுத்தி நிறைய கதைகளும் வாய்ப்புகளும் தேடிவருகின்றன. இவை அனைத்துக்கும் என்மேல் நான் வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம். எனக்கு ஆதரவாக யாரும் இல்லை. நான் ஒருத்தி மட்டுமே இருக்கிறேன்,” என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.